Thursday, January 18, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் அறுபத்தாறாவது ஸர்கம்.

                                           

                                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                                                சுந்தர காண்டம்

                                                   அறுபத்தாறாவது ஸர்கம்.

                        (சூடாமணியைக் காணும் ஸ்ரீராமனின் கழிவிரக்கம்) 



     இலக்குமணன் உடன் இருக்க, அனுமன் சொன்னதைக் கேட்டதும், அந்த மணியைத் தன் மார்பினில் அணைத்த வண்ணம் கண்களில் நீர் வழிய ஸ்ரீராமன் அழுதார்.

     அந்த உத்தமமான மணியைப் பார்த்ததும், கண்கள் குளமான ஸ்ரீராமன், மிகுந்த மன வேதனையில் கலக்கமடைந்தவராய், சுக்ரீவனைப் பார்த்து பின்வருமாறு உரைத்தார்.

     “அன்புமிக்க பசுவின் காம்புகளிலிருந்து கன்றினைக் கண்டதும், பால் தானாகச் சுரப்பது போல், இந்த உத்தமமான மணியைக் கண்டதும், என் இதயமும் உருகி ஈரமாகிறது!”

     “இந்த மணிரத்னமானது எனது மாமனாரால் வைதேஹிக்கு அளிக்கப்பட்டதாகும்.  மண நாளன்று தனது தலையில் சீதை இதை அணிந்திருந்ததால், மேலும் அழகு பெற்று விளங்கியது.”

     “நீரில் உற்பத்தியானதும், ஆன்றோர்களால் போற்றப்பட்டதுமான இந்த மணியை, அறிவாற்றல் மிக்க இந்திரன், யாகத்தின் பரிசாக, மன மகிழ்ச்சியுடன் அளித்தான்.”

     “சிறந்தவரே! (அனுமன்) எவ்வாறு என் தந்தையையும் ஜனகரையும் காணும்போது என் மன நிலை இருக்குமோ, இந்த மணியைக் கண்டு அவ்வாறே உணர்கிறேன்.”

     “என் அன்பிற்கினியவளான சீதையின் தலையில் இந்த மணி அழகுற அமைந்திருக்கும்.  நான் இப்பொழுது இதைப் பார்த்ததும், அவளையே அடைந்துவிட்டது போல உணர்கின்றேன்.”

      பின்னர் அனுமனைப் பார்த்து, “நற்பண்பு மிக்கவரே! மூர்ச்சை அடைந்தவன் மீது எவ்விதம் நீர் தெளித்து அவனை உணர்வடையச் செய்வார்களோ, அது போல, கண்ணீரின் நனைந்த வார்த்தைகளால் விதேஹ அரச குமாரியான சீதை சொல்லியவற்றை மீண்டும் சொல்லி, என்னைத் தெளிவிப்பீராக!” என்றார்.

     பின்னர் இலக்குமணனைப் பார்த்து, “இலக்குமணா! சீதை இங்கில்லாமல் இருக்கும் சமயத்தில் இந்த மணியை நான் பார்க்க நேர்ந்திருப்பது எவ்வளவு வருத்தத்தை உண்டாக்கும் தெரியுமா?” என்றார்.

      பின்னர் அனுமனிடம், “வீரனே! இன்னும் ஒரு மாத காலம் சீதை உயிர் தரித்திருப்பாள் என்றால், அவள் சிரஞ்சீவியாகிறாள்.  ஆனால், மைவிழியாளான அவள் இல்லாமல் இனி நான் கணப்பொழுதும் உயிர் தரித்திட மாட்டேன்” என்றார். 

     மேலும், “என் அன்பிற்கினியவளை எங்கு கண்டாயோ, அங்கேயே என்னையும் அழைத்துச் சென்றுவிடு! அவளின் நிலைமையைப் பற்றிக் கேட்ட பின்னர், இனி கணப் பொழுதும் நான் இங்கு காத்திருக்க மாட்டேன்!”

     “மெல்லிடையாளான, கற்புக்கரசியான என் மனைவி அங்கே சதா சர்வ காலமும் பயங்கரமான அரக்கியரால் பயமுறுத்தப்பட்டு என்ன நிலைமையில் இருக்கிறாளோ?”

     “சரத் காலத்து ஒளி மிகுந்த நிலவு, எவ்விதம் மேகங்களால் மறைக்கப்பட்டு, ஒளி மங்கியிருக்குமோ, அது போல, அவளுடைய முகமானது (அரக்கியரால் சூழப்பட்டிருப்பதால்) ஒளியிழந்து கிடக்குமே?”

     “அனுமனே! சீதை என்னவெல்லாம் சொன்னாளோ, அவற்றையெல்லாம் முழுமையாக என்னிடம் கூறிவிடு! நோயுற்றவன் மருந்தைக் குடித்து உயிர் வாழ்வது போல, நான் இவற்றைக் கேட்டுத்தான் உயிர் தரித்திருக்க வேண்டும்!”

     “பிரியமானவளும், இனிய வார்தைகள் பேசுபவளும், கட்டழகியும், என்னை விட்டுப் பிரிந்திருப்பவளுமான அவள் என்ன சொல்லி அனுப்பினாள்?  துன்பத்திற்கு மேல் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அவள் எவ்விதம் உயிர் தரித்திருக்கிறாள்? அனுமனே! நீ எனக்கு விவரமாகச் சொல்வாயாக!” என்றார்.

 

                                   அறுபத்தாறாவது ஸர்கம் நிறைவு

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...