Tuesday, December 22, 2009

கீதா சொல்லிய அந்த குண்டு நோட்டு பொள்ளாச்சி மாமாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் (நானும் கீதாவும்) அப்பாவும் அம்மாவும் traning சென்ற பொழுது மாமா (பொள்ளாச்சி PAP காலனியில் சுமார் மூன்று மாதங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது. பொள்ளாச்சியில் நாங்கள் எழுதி படிப்பதற்காக மாமாவால் அவர்கள் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்கப்பட்ட நோட்டு. சுமார் 500 பக்கங்களுக்கு மேல் இருக்கும். பெரிய அக்கா ரமா shorthand எழுதி பழகிய நோட்டு. பிறகு கீதாவாலும் என்னாலும் ஹிந்தி முதலான பாடங்கள் எழுத இடம் கொடுத்த நோட்டு. கோலங்களால் நிரம்பிய நோட்டுக்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் பயங்கர demand தான். கோலங்களுக்கு விடை கொடுத்த பிறகு அந்த நோட்டை இப்போது தேடிப்பிடிக்க வேண்டும்.

என் தாத்தாவுடன் நாங்கள் பழகியது பொள்ளாச்சியில் நாங்கள் இருந்த அந்த மூன்று மாதங்களில் தான். தன் டிரங்கு பெட்டியில் வைத்து பூட்டியிருக்கும் நெஸ்காப்பியை தினம் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கு எடுத்து பாலில் கலந்து குடிக்குக்போது எனக்கும் அதில் பங்கு கொஞ்சம் கிடைக்கும். தினமும் பாட்டில் வைத்து மரத்தூளில் வெந்நீர் அடுப்பு தயார் செய்யும் லாகவமான வேலையை பார்ப்பது ஆச்சர்யமான விஷயம். தாத்தாவுக்கு தினமும் இட்லி வேண்டும். மாமா வீட்டில் தினசரி மாவாட்டும் வேலை தவறாமல் நடக்கும். அத்தை செய்யும் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.

தொடர்வேன்....

Saturday, December 19, 2009

மார்கழி மாதமும் FIRE எஞ்சினும் :

மார்கழி மாதம் என்றால் நான் முன்பு எழுதிய இரண்டு விஷயங்களோடு ஒரு முக்கியமான அழகான நிகழ்வும் உண்டு. அதுதான் கோலம். அக்ரஹாரத்தின் இரு வீதிகளிலும் மார்கழியின் காலைக்குளிரில் எத்தனை கோலங்கள். அதுவும் பஜனை வீட்டை கடக்குமுன் கோலம் போட்டிருக்க வேண்டும். நாளொரு கோலம்: பொழுதொரு வண்ணம்: அக்ரஹாரத்துபெண்களின் கற்பனா சக்தி அபாரமாய் இருக்கும். பெரிய கோலம் போட்டு, நடுவில் சாணியில் பூசணிப்பூவை வைத்தால் தான் கோலம் முற்றுப்பெறும். இந்தக்கோலத்தையும் பூசணிப்பூவையும் நினைத்தால் அந்த பால்காரன் ஞாபகம் வருகின்றது. நாங்கள் அப்பொழுது சாமிநாத டாக்டர் வீட்டில் குடி இருந்தோம்.
புகளுரிளிருந்து வரும் சொசைட்டி பால்காரன். சைக்கிளில் வெண்கல மணி கட்டியிருப்பான். தவிட்டுப்பாளையம் தாண்டி வேலூர் காவிரி பாலத்தில் வரும் பொழுதே அடித்துக்கொண்டிருக்கும் மணி வேகமாக வரும் ஒரு fire என்ஜினைத்தான் நினைவுபடுத்தும். எங்கள் வீடு அக்ரஹாரத்தின் கடைசி வீடானதால், பாலத்தில் அவன் எழுப்பும் ஒலி வீட்டில் அனல் பற்ற வைக்கும். பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாசலில் காத்திருக்க வேண்டும். அவன் வரும்பொழுது வாசலில் இல்லை என்றால் அன்றைக்கு பால் அவ்வளவுதான். முத்து பால் பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே நான் தயாராக இருப்பேன். அவனுக்கு என்னவோ என் அக்க கீதா போடும் கோலத்தின் மேல் அவ்வளவு காட்டம். (மார்கழி கோலத்தைப்பற்றி என் அக்காவின் வலைப்பூவில்
(
http://geethasrv.blogspot.com/) அறிந்து கொள்ளலாம். முக்கால்வாசி நாட்களில் மப்பிலேயே இருக்கும் குடிமகன். நேரே அந்த சைக்கிள் கீதா போட்டு முடித்த அந்தக்கோலத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் பூசணிப்பூவை நசுக்கி அதன் மேலேயே நின்றிருக்கும். சைக்கிளின் டயர் தடங்கள் கோலத்தை சின்னா பின்னம் ஆக்கியிருக்கும். எவ்வளவோ முறை அவனிடம் சொல்லியும் அவன் மாறவே இல்லை. ஒவ்வொருவருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..





ரமா எழுதிய ஒரு விஷயம் உண்மைதான். பேசுவதை விட எழுதுவது மிகவும் இன்பமான ஒரு நிகழ்வு. பேசும்பொழுது யோசிக்க நேரம் இருப்பதில்லை. மற்றும் பேசும் பொழுது நம்மைச் சுற்றிய உலகம் நம்மை கவனித்துக்கொண்டிருக்கும் . பேசுவது ஒரு fast food மாதிரி. அந்த நேரத்தில் தோன்றுவதைப் பேசி விடலாம். கேட்பவர் மனதை நோகடிக்காமல் பேச வேண்டும். பல நேரங்களில் தெரிந்தே பொய்யும் பேச வேண்டி இருக்கும். ஆனால் எழுதும்போது நாம் மட்டும் தான். யாருடைய குறுக்கீடும் இருக்காது. மனதில் ஓடும் எண்ணஅலைகளை காகிதத்தில் பதித்தபிறகு வரும் களைப்பு மிகவும் சுகமானது. கடிதங்கள் சாகா வரம் பெற்றவைதான்...

Wednesday, December 16, 2009

மார்கழி மாதம்.... திரும்பிப்பார்க்கின்றேன்....
இன்று இன்னுமொரு மார்கழி மாதம் பிறந்துள்ளது. வேலூர் அக்ரஹாரவாசிகளுக்கு மார்கழி மாதம் தனி தான்.. (கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் கதை! (அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.. சரித்திரம் ஆகி விட்டதல்லவா? மார்கழி மாதம் என்றால் இரண்டு விசேஷங்கள்.. ஒன்று பஜனை.. மற்றொண்டு அரையாண்டுத்தேர்வு...
மார்கழி மாத பஜனை..
வேலூர் லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில்...
அர்ச்சகர் வீரராகவ ஐயங்கார்...
வெண் பொங்கல்... ஆஹா... முழங்கை நெய்சோர நீங்கள் பொங்கல் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அப்பா தான் பஜனைக்கு அணித்தலைவர். விடியல் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து அந்த சாம்பல் நிற ஹரே ராமா சால்வையை போர்த்துக்கொண்டு அப்பா கோயிலுக்கு சென்று விடுவார். நான் எப்பவுமே லேட்தான். அப்பா விட்டுவிட்டு சென்று விட்டார் என்ற கோபத்தில் சீக்கிரம் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றால் அங்கே அடுத்த அதிர்ச்சி காத்திருக்கும்! என் தோழன் முரளி கிருஷ்ணன் என் பிரிய சுருதி பெட்டியை கைப்பற்றி இருப்பான். சீக்கிரம் வந்ததால் அவனுக்குத் தான் முதல் வாய்ப்பு என்று அப்பா சொல்லிவிடுவார். கோயிலை வலம் வந்து பஜனை கிளம்பும். நான்கைந்து பேர்களுடன் ஆரம்பிக்கும் பஜனை பின் தெருவில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள பெரிய goshtiyaaga (கொஞ்சம் அதிகம் தான்..) மாறி விடும். ஐயர் வீட்டு திருப்பத்தில் இன்னொரு
அக்ரஹாரத்தில் நுழையும் போது சுருதிப்பெட்டி எனக்கு கை மாறிய பிறகுதான் பஜனையில் என் கவனம் செல்லும். சின்னு செட்டியார் வீட்டோடு மீண்டும் திரும்பி கோயிலுக்கு செல்லும் பஜனை கோஷ்டி. மீண்டும் கோயிலை அடையும் பொழுது கோஷ்டி இன்னும் பெரியதாக மாறி இருக்கும். அப்பா "சுத்தப்ரம்ம பராத்பர ராம்' பாடத் தொடங்கும் போது , கிழக்குத்தெரு பையன்கள் பக்கத்து காம்பவுண்ட் சுவர் ஏறி, பெரிய பூவரச இலைகளைப்பறித்து அனைவருக்கும் விநியோகம் செய்துவிடுவார்கள். ஹரியோ ஹரி பாடி முடித்ததும், வீர ராகவ ஐயங்கார் மடப்பள்ளியிலிருந்து பெரிய பாத்திரத்தில் சுவாமிக்கு நெய்வேதனம் செய்ய பொங்கல் பிரசாதம் எடுத்து வந்து பூஜை நடக்கும். சுடச்சுட அந்தப் பொங்கலை ஐயங்கார் மாமா கையைஊதி ஊதி ஒவ்வொருவருக்கும் விநியோகம் செய்வதே தனி கலையாக இருக்கும்.
இப்பொழுது அப்பாவும் இல்லை, வேலூர் agrahaaramum இல்லை, ஐயங்கார் மாமாவும் இல்லை, பஜனையும் இல்லை. எல்லோரும் வேறு veru thisaiyil பயணித்து விட்டோம். ஆனால் மார்கழி மாதத்து நினைவுகள் என்றுமே என்னை விட்டு அகலப்போவதில்லை...

Saturday, December 12, 2009

வேலூர் அக்ரஹாரத்தின் இப்போதைய படங்கள் இவை. இந்த முதல் படம் நாங்கள் எண்ணற்ற முறை பயணம் செய்த பாதை.. வாய்க்களுக்குக் செல்லும் வழி. எல்லைத்தகராரால் அடைபட்டுக் கிடிக்கின்றது.


இந்தப்பதையின் இருபுறமும் வளர்ந்து இருக்கும் நெருஞ்சி முட்களிளிருந்து தப்பி (அப்படியும் காலில் குத்தி விடும்) எவ்வளவு முறை சென்று வந்திருப்பேன்? ம்ம் ...


இதோ அக்கிரஹாரம். மார்கழி மாத பஜனை சென்ற வழியில் tempo வேன்கள் ! செல் போன் டவரும் வானத்தை மறைக்கும் மின் கம்பிகளும்.. சுவாமிநாத டாக்டர் வீட்டின் முன்புற தோற்றம். நாங்கள் குடி இருந்தபோது சிமென்ட் பூசப்படாத செங்கல் சுவர் சுற்றியும்.. ஜன்னலுக்கு பதில் மூங்கில் தட்டிகள். வாசல் கதவே மூங்கில் தட்டி தான்,,,

thodarven...
வேலூர் காவிரிக்கரை பட்டவர்த்தி பிள்ளையார் கோயிலைஇருபது வருடங்களுக்கு பிறகு பார்த்த போது நினைவுகளில் ஊடுருவிப் பாய்ந்த இளமைப்பருவம் - சிவராமன் (அக்காவின் மகன்) தனக்கு இளமைப்பருவ நினைவுகள் ஒன்றும் இவ்வளவு அழகாக இல்லையே என்று குறைப்பட்டுக்கொண்டதற்கு இவர்களுக்கு கிடைக்காத கிராம வாழ்க்கையே கூட காரணமாக இருக்கலாம்.
காவிரிக்கரையைப் பற்றி சொல்லும் போது பாலத்துக்கு அடியில் இருந்த அப்போதே சிதிலமான சிறிய பிள்ளையார் கோயிலைப்பற்றி சொல்லவேண்டும். திராவிட கழகத்தாரால் மூளியாக்கப்பட்ட பிள்ளையார்! சிறிய மேடை! இடிந்த படிக்கட்டுக்கள்! ஆடி மாதத்தில் இந்த மேடையில் அமர்ந்து புது நீரின் வாசத்தை அனுபவிக்க எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வண்டி இழுத்து வாயில் நுரை தள்ளும் மாடுகள் போல், கருங்கல் படிக்கட்டுக்களில் மோதி மோதி நுரை தள்ளும் வெள்ளநீர்! சுழன்று அடிக்கும் காற்று நீர்த்திவலைகளை முகத்தில் அள்ளித்தெளிக்கும். எழுந்து செல்ல மனமே வராது. இருட்டி விட்டது, வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் வற்புறுத்தலால் தான் கிளம்ப வேண்டி வரும். கருங்கல் படி ஏறி மேலே வரும்போது அங்கே சைக்கிளில் வைத்து விற்கப்படும் அன்னாசிப்பழத்துண்டுகள் ! அவசரத்தில் வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு மனிதத்தை தேடிக்கொண்டிருக்கின்றோம்!
தொடர்வேன்....

Wednesday, December 9, 2009







சென்ற ஞாயிறு அன்று மீண்டும் வேலூர் செல்ல நேர்ந்தது. மீண்டும் காவிரி... இந்த முறை பிள்ளையாரை மறக்கவில்லை. முதலிலேயே அவரைப்பார்த்து விடுவது என்ற முடிவுடன் காரை பாலம் தாண்டியவுடன் நிறுத்திவிட்டேன். ஸ்ரீனிவாசனும் (பெரிய) எங்களுடன் (நான், பூமா மற்றும் ஹரி) வந்திருந்தான். பிள்ளயரைப்பார்க்க வசதியாக படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால் கோயில் தான் எல்லாம் மாறி விட்டது. அரச மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மணிகளைக் காணவில்லை. பிள்ளையாருக்குத் துணையாக குடிமகனொருவன் பின்புறமாக உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலுக்கு பின்புறமிருந்த ஓடையில் (குடத்தில் நாங்கள் நீர் மொண்ட) சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்.

அந்தோ... கோயிலிலிருந்து வாய்க்கால் வரை சென்ற அந்த ஒற்றையடிப்பாதையைக் காணவில்லை. புதர்கள் மண்டி பாதை இருந்த சுவடே தெரியவில்லை. கோயிலின் அருகில் இருந்த அந்த செங்கல்லினால் கட்டப்பட்ட வாய்க்கால் பாலம் மட்டும் அப்படியே இரு(டி)ந்துகொண்டு .....ம்ம் ..பாலம் வழியே காவிரிக்கு செல்லும் வழியைக் காணவில்லை. மீண்டும் புதர்கள்.. நிறைய விஷயங்களைக் காணவில்லை. ஆனால் ... அந்த பசுமை.... வாழையும், தென்னையும், வெற்றிலையும் மட்டும்தான் வேலுரை இன்னும் வேலூராக வைத்துள்ளது.

Saturday, December 5, 2009

இதோ இது வேலுரின் வாழைத்தோப்புக்களை விழுங்கிய நான்கு வழிச் சாலை.
புதிய பாலத்திலிருந்து வேலுருள் நுழையாமல் நேரே பரமத்தி செல்லும் சாலை. ஆனால் இந்த சாலை காலி செய்த சோலையின் மாதிரிதான் நீங்கள் கீழே இன்னொரு படத்தில் பார்ப்பது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில். என் நினைவில் தெரிந்த நாள் முதல் தன் நிலை மாறாது இருக்கும் கோயில். எவ்வளவோ புதிய கோயில்கள் வேலுருக்குள் வந்திருந்தாலும் காசி விஸ்வநாதர் அப்படியே இருக்கிறார்.

வாழைத்தோப்பின் அழகைப்பாருங்கள். தென்னையும் வாழையும் செழித்த வேலூர். தாவி ஓடிய (இறந்த காலம் தான்) காவிரியின் கரையில் செழித்து வளர்ந்த இந்த பசுமை இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்கும் என்பது கேள்விக்குறிதான்.

தொடர்வேன்...

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...