ஒரு கம்பன் கழக விழாவிற்காக போட்டிக்கு அனுப்பப்பட்ட கம்பன் மீது எழுதப்பட்ட பத்து வெண்பாக்கள்: பரிசு கிடைக்கவில்லை. கம்பன் கவியே கவி என்று ஈற்றடி இருக்க வேண்டும்.
உங்கள் பார்வைக்காக:
வடமொழி வான்மீகி வாழ்ந்து வரைந்த
தடந்தோள் இராமன் கதையை – திடமுடன்
செம்மொழி தண்தமிழ் செப்பிய மாகவி
கம்பன் கவியே கவி. -----(1)
அண்ணலும் நோக்க அவளும், உயிரில்
கன்னலெனப் பூத்தநற் காதலைப் – பண்ணாக்கி
நம்மின மாந்தர்க்கு நன்றிதைச் சொல்லிய
கம்பன் கவியே கவி. -----(2)
கற்பின் அணியினைக் கண்களால் கண்டபின்
சுற்றம் சுருங்க வுரைத்தசொல் – விற்பனன்
பெம்மான் அனுமன் சிறப்பை நயந்துரைத்த
கம்பன் கவியே கவி. -----(3)
வானர மன்னனை வீடணனு டஞ்சேர்த்து
கானவன் தன்னுடன் ஏழாக்கி – மானவர்
தம்மிடை யாவருங் கேளிரே வென்றநம்
கம்பன் கவியே கவி. -----(4)
(கானவன் – வேடன் – குகன்)
கண்ணிலான் பெற்றிழந்த வண்ணம் தயரதன்
எண்ணிலாத் துன்ப முழந்துயிர் – மண்ணிலே
வெம்ப மகன்கானே குங்கதை சொன்னநம்
கம்பன் கவியே கவி. -----(5)
தாரிடை வண்டுறங்கும் நல்லுவமை போலாங்கே
தூரிகை வண்ணம் தெரிந்தெடுத்து – சீரிய
தெம்புடன் ராமன் சரிதம் வரைந்திட்ட
கமபன் கவியே கவி. -----(6)
இந்திரன் இச்சை யகலிகை கல்லாக்க
தந்திரத் தாலேதான் தானிழந்தாள் – மந்திர
வம்புடை மாதரின் கற்பினைப் பாடிய
கம்பன் கவியே கவி. -----(7)
(வம்பு – நறுமணம்)
பிறன்மனை நோக்கிய பித்தர்தம் வாழ்வு
உறவழிந் தேகும் நரகம் - மரபிது
வென்றே தகைவுடன் பாடி நெறிசொன்ன
கம்பன் கவியே கவி. -----(8)
கற்றவை நில்லா தொழுகிய வாலியைக்
கொற்றவன் நில்லா துமுன்கொல்ல – உற்றது
உம்பர்க் கழகே வெனவுணர்த் திட்டபெருங்
கம்பன் கவியே கவி. ------(9)
அஞ்சனை மைந்தன் அரக்கன் நெருப்பிட
வெஞ்சினங் கொண்டு நகரமே – அஞ்சிட
விம்மிய லங்கை யெரித்த விதம்சொன்ன
கம்பன் கவியே கவி. ------(10)
Saturday, September 4, 2010
Subscribe to:
Posts (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...