Sunday, November 25, 2012

துளசி பூஜை!

இன்று துளசி பூஜை!  மீண்டும் வேலூர் ஞாபகம்!

 என் மனைவி மட்டுமே செய்த பூஜையைப் பார்த்தபோது வேலூரில் வெகு விமரிசையாக இந்த விழா நடந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை, அக்ரஹாரத்தில் சென்னமத்தை (நண்பன் நரசிம்மனின் வீடு) வீட்டின் பின்புறம் இருந்த மிகப்பெரிய துளசி மாடத்திற்கு செய்யப்பட்ட விமரிசையான பூஜை!

எல்லா வீட்டுப் பெண்களும் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த ரவை உருண்டை, நெற்பொரி உருண்டை, கொசம்பரி(பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து, அதில் மாங்காய், வெள்ளரிக்காய் முதலியவற்றுடன் பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டப்பட்டு, எலுமிச்சம்பழமும் பிழியப்படும்) ஆகியவை நிவேதனம் செய்யப்படும்.

தீபாவளியன்றே, இன்றய தினத்திற்காக பட்டாசுகள் தனியே எடுத்து வைக்கப்பட்டிருக்கும். துளசி மாடத்தைச்சுற்றி நாங்கள் பட்டாசுகளை கொளுத்தி விட்டு இந்த உருண்டைகளுக்காக காத்திருக்கும் அவதியே சுகமானது,,,,

இன்று வேலூரில் நாங்கள் யாரும் இல்லை. சென்னமத்தையின் வீடும் இல்லை,(கோகிலா திருமண மண்டபமாக இப்போது மாறிவிட்டது)!

இப்பொழுது எங்கள் வீட்டிற்கும் வர ஆளில்லை. பட்டாசு விட சிறுவர்கள் இல்லை, இந்தப்பயணம் இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பது கேள்விக்குறி தான்!

Friday, January 20, 2012

பயணம் தொடர்கிறது....



        திருப்பாலைத்துறையிலிருந்து  கிளம்பும்போதே மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். அடுத்து செல்ல வேண்டிய இடம் திருநல்லூர் எனப்படுகின்ற நல்லூர். பாபனாசத்திலிருந்து கும்பகோணம் செல்லுமுன் சிறிய சாலை ஒன்று பிரிந்து ரயில்வே கேட் வழியாக சென்றது. ஊர் மக்களிடம் வழி பற்றி உறுதி செய்துகொண்டு காரில் பயணம் தொடர்ந்ததது. அந்தி மாலையில் வயல் வெளிகளுக்கு நடுவே சென்றபோது பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குதிரையில் பயணம் செய்தது நினைவில் வந்தததை தடுக்கமுடியவில்லை. பாதையின் இருமருங்கிலும் பச்சைப்பசேல் என்று நெல் வயல்கள். நல்லுருக்குத்திரும்பும் பாதையில் ஒரு அருமையான அல்லிக்குளம்.





பாட்டீச்வரம் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இந்த குளம் அமைந்துள்ளது. சாலையில் வலது புறம் திரும்பி நல்லூர் நோக்கிச் சென்றோம்.

நல்லுரின் சிறப்பு:

       கோயிலின் மூலவரான லிங்கம் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசியம் இங்கு நிலவுகிறது.



மணி ஆறை நெருங்கிகொண்டிருந்ததால் அவசர அவசரமாக சன்னதியை அடைந்தோம். படிகளில் ஏறி செல்லவேண்டி இருந்தது. கோயிலில் எங்களைத்தவிர இன்னும் சிலர் இருந்தனர். நாங்கள் பார்க்கும் பொழுது லிங்கம் தாமிர கவசம் அணிந்தது போல் தோற்றம் அளித்தது. அது கவசம் இல்லை, லிங்கமே அவ்வாறு உள்ளது என்று கோயில் குருக்கள் சொன்னார். மின்சாரம் வேறு இல்லாததால் மிக இருட்டாக இருந்தது.
 
                 மூலவர் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்மன் பெயர் கிரி சுந்தரி.  மாசி மகம் இத்தளத்தில் மிகவும் விசேஷம் என்று சொன்னார்கள். கோயில் முன் இருக்கும் திருக்குளத்தில் ஏழு கடல்கள் சங்கமிப்பதாக ஐதீகம் என்றும் சொன்னார்கள். கோயிலின் சில காட்சிகள்:








கோயிலின் மரத்தாலான கதவுகளில் நல்ல வேலைப்பாடுகள். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில காட்சிகள்;





அடுத்து பட்டீஸ்வரத்தில் சந்திப்போம்.......

Monday, January 9, 2012

காரில் ஒரு பயணம்………….

       இந்த முறை அரையாண்டு விடுமுறையில் எஙுகு செல்வது என்று யோசித்தபோது கும்பகோணம் கோயில்களைப் பார்த்துவரலாம் என்று முடிவெடுத்தோம். கரூர் வீட்டிலிருந்து அக்கா, ரவி மற்றும் லதாவும் கூட வர முடிவானதும் என்னுடைய மாருதி காரிலேயே சென்று வரலாம் என்றும் முடிவெடுத்தோம்.

       சனிப்பெயர்ச்சி நாளன்று வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு சென்ற போது அங்கே சரவண குருக்களை சந்திக்க நேர்ந்தது. எங்களுடைய பயணம் பற்றி அவரிடம் பேசியபோது தன்னுடைய உறவினர் பாபநாசம் கோயிலில் இருப்பதாகவும், பயணத்திற்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்றும் சொன்னார். ஆகா! பயணத்திற்கு முருகனின் அருள் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி ஏற்பட்டது.

       கும்பகோணம் பக்கம் நானும் அதிகம் சென்றதில்லை. ஒரு முறை எங்கள் சங்கக் கூட்டம் அங்கே பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற போது சென்றது தான். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு
1987 ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் செய்யாதபோது சென்றது தான்.

           கரூர் கடைகளில் கும்பகோணம் பற்றிய புத்தகங்கள் கிடைக்காததால், இன்டர்நெட்டில் தேடியபோது கிடைத்த விவரங்கள் ஏராளம். ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் அது கும்பகோணத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்றும் அறிய செய்திகள் கிடைத்தன. அவற்றை printout ம் எடுத்துக்கொண்டேன்.

          அனுமன் ஜெயந்தி நாளான டிசம்பர் 24  ம் தேதி காலையில் வெண்ணைமலை ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்துகொண்டு பூமாவின் வீட்டுக்கு சென்றோம். காலை உணவு முடித்துக்கொண்டு சுமார் பதினோரு மணி அளவில் கரூரை விட்டுப் புறப்பட்டோம்.

        கரூர் திருச்சி சாலை சற்று சுமாராக இருந்தது. குளித்தலை தாண்டி பெட்டவாத்தலை வரை மிக மோசமான சாலை. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவானைக்காவல் நோக்கி சென்று பின் சென்னை சாலையில் சென்று தஞ்சாவூர் bypass அடைந்தேன். ரவி வழி சொல்ல நேராக திருவெறும்பூர் சாலையைக் கடந்தது PNB  Circle ஆபீஸ் ஐத்
தாண்டியதும் நான்கு வழிச்சாலை வரவேற்றது.

     நெடிய பயணம். மணி பகல் 1 .30 ஐ நெருங்கி க்கொண்டு இருந்தது. தேநீர் அருந்தவழி இல்லை. சுங்கச்சாவடி தாண்டியதும் மாருதி வேகம் பிடித்தது. சிறிது தூரம் சென்றதுமே ஒரு மோடல்(Motel) கண்ணில் பட்டது வயிற்றில் தேனீர் வார்த்தது போல் இருந்தது.


நல்ல பார்கிங் வசதியுடன் இருந்தது. சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டு, தேநீர் அருந்திவிட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது .



கும்பகோணம் வரை இந்த சாலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் எண்ணியது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இரண்டையும் வேகமாக கடந்து சென்றது வண்டி.. தஞ்சாவூர் செல்லாமலேயே சென்ற வண்டி திடீரென்று பாதையை விட்டு விலக நேர்ந்தது. கும்பகோணம் செல்ல கைகாட்டி கீழிறங்க கட்டளையிட, மீண்டும் குறுகலான சாலைப்பயணம். நேரம் மதியம் மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. கரடு முரடான பாதை கரூர் திருச்சிப்பாதைக்கு நல்ல பெயரைப்பெற்றுத்தந்தது.



குறுகிய வளைவுகள், மேடுகளாலும் பள்ளங்களாலும் போடப்பட்ட சாலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தன. மாருதி சலைக்காமல் சென்று கொண்டிருந்தது. பாபநாசத்தைக் கடந்து கொண்டிருந்தது. திடீரென்று அக்கா 108 சிவஸ்தலம் போர்டைப்பார்த்த

தாகச்சொன்னார். முன்னே சென்றுவிட்ட வண்டியை நிறுத்தி Reverse எடுத்து கோயிலை அடைந்து வண்டியை குளக்கரையை ஒட்டி நிறுத்தினேன். மணி மாலை 3.45. கோயில் 4 மணிக்குத் திறப்பார்கள் என்று சொன்னார்கள். ஏற்கனெவே அங்கு பத்து பதினைந்துபேர் காத்திருந்தார்கள்.



மரங்களுக்கு இடையில் கோயில்.

சரியாக நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது. 108 சிவலிங்கங்களைக் காண சிறப்பு அனுமதி சீட்டு வாங்கி சென்றோம். ஒரே ஹாலில் 108 சிவலிங்கங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.




மூன்று வரிசைகளில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லிங்கத்திற்கும் மேலே ஒரு விளக்கு தொங்கிக்கொண்டிருந்தது.. இதற்கு விளக்கேற்ற தனி சீட்டு வாங்க வேண்டும். இவற்றைப்பார்த்துவிட்டு சுவாமி சன்னதிக்குச் சென்றோம். கூட்டமில்லாததால் நல்ல தரிசனம். ப்ரசாதம் வாங்கிக்கொண்டு கிளம்பும் போது, குருக்களிடம் விசாரித்த போது, தான் தான் வெண்ணய்மலை குருக்களின் உறவினர் என்று சொன்னார்.

நாங்கள் வெண்ணைமலையிலிருந்து வருவதாகச் சொன்னதும், எங்களை உள்ளே அழைத்துச் சென்று மீண்டும் தரிசனம் செய்வித்து ப்ரசாதம் வழங்கினார். எங்கள் பயணம் பற்றி கூறியதும், அங்கிருந்தவரிடம் சொல்லி, நாங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும், செல்லும் வழி பற்றியும் விளக்கமாக எழுதிக்கொடுத்தார்.

அவர் கொடுத்த பயணக் குறிப்பு.

24/12/2011 பார்க்கவேண்டியவை:

1. திருப்பாலைதுறை

2. திருநல்லூர்.(நல்லூர்)

3. பட்டீஸ்வரம்/திருசக்திமுற்றம்.

4. சுவாமி மலை

5. திருவலஞ்சுழி

6. தாராசுரம்.

7. கும்பேஸ்வரர்/சாரங்கபாணி/ராமசுவாமி கோயில்கள்.

25/12/2011 பார்க்கவேண்டியவை:

1. ஆலங்குடி(குரு ஸ்தலம்)

2. திருநாகேஸ்வரம்(ராகு ஸ்தலம்)

3. ஒப்பிலியப்பன் கோயில்

4. அய்யாவாடி (ப்ரத்யங்கரா தேவி)

5. நாச்சியார் கோயில் (கல் கருடன்)

6. திருப்பாம்புறம்- ராகு கேது ஸ்தலம்

7. திருமிச்சூர், - லலிதாம்பிகை

8. திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் கோயில்.

9. கூத்தனூர் (சரஸ்வதி கோயில்)

10. திருநள்ளார் (சனீஸ்வரன் கோயில்)

11. திருக்கடையூர்.(அபிராமி)

26/12/2011 அன்று பார்க்கவேண்டியவை.

1. கீழ்ப்பெரும்பள்ளம்.(கேது)

2. திருவெண்காடு (புதன்)

3. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)

4. கஞ்சனூர்(வெள்ளி)

5. சூரியனார் கோயில்

6. திங்களூர்.

குருக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டோம். அட்டவணைப்படி, முதலில் பார்க்கவேண்டியது திருப்பாலைத்துறை. அதுவும் பாபநாசத்திலேயே இருந்தது. கோயிலானது ஒரு சாலை வளைவில், இடது புறம் இருந்ததால் பார்வைக்குத் தப்பி விட்டது. சுமார் 2 கி மீ முன்னே சென்று விட்டு பின் விசாரித்துக் கொண்டு வந்த வழியிலேயே திரும்பிச் சென்று கோயிலை அடைந்தோம். மாலை 5.30 மணி.

சூரியன் அஸ்தமிக்கும் நேரம்.





சூரிய ஒளியின் பிண்ணனியில் ஒரு காட்சி:





கோயிலின் முன்புறத்  தோற்றம்:





ஒரு silhout காட்சி:





கோயிலில் நுழையுமுன், வலதுபுறத்தில் செங்கல்லினால் கட்டப்பட்ட ஒரு நெற்களஞ்சியம். நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.







இங்கு சுவாமி தரிசனம் செய்து கொண்டு புறப்பட்டோம்.

பயணம் தொடரும்.......

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...