Wednesday, December 5, 2018

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

2.0 x பக்ஷிராஜன்




நேற்று இந்தப்படம் 3டியில் பார்த்தேன். தொழில்நுட்ப நேர்த்தியில் தமிழனுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படம். 68 வயதில் ஒருவர் இவ்வளவு மெனக்கெட முடியும் (எவ்வளவு பணம் கொடுத்தால் தான் என்ன?) என்பது பெரும் ஆச்சரியம் மற்றும் வியப்பாய் உள்ளது. எமி ஜாக்சனுக்குச் சரியான பாத்திரம் வகுத்து, வசீகரனை டூயட் பாடாமல் காப்பாற்றிய(நம்மையும்) டைரக்டர் சங்கருக்கு பெரும் பாராட்டு. படத்தில் மையக்கருத்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. இதை ஒரு பாணியில் சொல்லியிருக்கிறார்கள். மொத்த உலகமே ஒன்றையொன்று சார்ந்ததாய் இருக்குமாறு தான் இயற்கை வழி செய்துள்ளது.
செல்போன் டவர்களால் பறவைகள் அழிவதற்கு அறிவியல் சான்றுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பறவைகளின் நடமாட்டம் குறைந்துவிட்டதை உணரமுடிகிறது அல்லவா!
காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிவிட்டதால், ஜாதியை ஒழிக்க நாம் கிளம்பியதில் காக்கை குருவிகள் அழிந்தனவோ?
எங்கள் ஊரில் சுத்தம்மாய் காகங்களே கண்ணுக்குத் தெரிவதில்லை! காகத்தின் சப்தம் கேட்டு விருந்தாளிக்குக்காத்திருந்த காலமெல்லாம் போச்சு! முன்பெல்லாம், மழை பெய்யும் முன் அதிகாலை நேரத்தில், இன்னும் அணைக்கப்பட்டிராத தெருவிளக்குகளைச்சுற்றிப்பறக்கும் விட்டில்களை கொத்தித்தின்னும் காகக்கூட்டங்கள் எங்கே?
மாலை மயங்கும் நேர்ங்களில், மின் கம்பங்களில் வரிசையாய் அமர்ந்திருக்கும் காகங்களைப் பார்த்து, "" டேய்! காக்காய்ப்பள்ளிக்ககூடம் டா"" என்று வியந்த மாணவப்பருவத்தை நான் இன்னும் மறக்கவில்லை.
அன்னத்தை வைத்துவிட்டு,' கா...கா....' என்று நாம் கரைந்தாலும் காகம் கண்ணுக்குத்தட்டுப்படுவதில்லை! தெருவில் கிடக்கும் எலிகளும் நாய்களும், கார்ச்சக்கரங்களில் காணாமல் போகின்றனவே ஒழிய காகங்கள் அதைத்தின்ன வருவதில்லை! நாம் பள்ளியில் படித்த பாடங்கள் எல்லாம் பொய்த்துவிட்டன. இனி யூடியுப் சேனல் கார்ட்டூன்களில் தான் குழந்தைகளுக்குக் காகத்தைகாட்ட முடியும்!
என் வீட்டுக்கிணற்றில் வசிக்கும் சில குருவிகளை சில நேரங்களில் காணவில்லை என்றாலே மனம் பதைத்துவிடுகிறது. அவற்றை மீண்டும் பார்த்தால் தான் நிம்மதி! பட்டாம் பூச்சிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் மிகவும் அரிதாகிவிட்டன! மின்மினிப்பூச்சிகள் இப்பொழுது யார் கண்ணுக்காவது தட்டுப்படுகிறதா?
செல்போன் டவர்கள் வேண்டுமானால் இதற்குக்காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பறவைகளும் பூச்சிகளும் அருகிவிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமல்லவா!
பறவையை ரசித்த மனிதன் அதை அதிகம் புசிக்க ஆரம்பித்து விட்டானா? சிட்டுக்குருவிகளைப்பிடித்து ஹோட்டல் காரர்களுக்கு விற்று விடுவதாகவும் செய்திகள் உண்டு.
ரஜினி, சங்கர், 3D இவற்றையும் மீறி படம் சொன்ன செய்தியை சிறிதளவாவது பின்பற்ற முயற்சிக்கலாம்.
படம் புணையப்பட்ட தென்றாலும், அதனால் என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளேன்.
பறவைகளைக்காப்போம்!!!!
இயற்கையைப்போற்றுவோம்!!!!!!
நன்றி!

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...