Tuesday, December 24, 2019



திருப்பாவைச்சித்திரங்கள்

திருப்பாவை 07



கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.




திருப்பாவைச்சித்திரங்கள்

திருப்பாவை 06

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்



திருப்பாவைச்சித்திரங்கள்

திருப்பாவை 05


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்




திருப்பாவைச்சித்திரங்கள்

திருப்பாவை 04



ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.



திருப்பாவைச்சித்திரங்கள்

திருப்பாவை 03

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


திருப்பாவைச்சித்திரங்கள்!

திருப்பாவை 02




வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


திருப்பாவைச்சித்திரங்கள்!


திருப்பாவை 01

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.







Thursday, August 8, 2019

ஆடிக் காற்று!
வழக்கத்தை விட இந்த மாதம் ஆடிக்காற்று இங்கு பிய்த்து உதறுகிறது! பக்கத்து பிள்ளையார் கோயில் அரச மரமும் அதனுடன் பின்னிய வேம்பும் இந்தக் காற்றில் சலசலத்துத்தான் விட்டன! வகுப்பில் டீச்சர் சைலன்ஸ் என்றதும் அடங்கி மீண்டும் எழும் சலசலப்பாய் விட்டு விட்டு ரீங்காரமாய், இல்லை இல்லை, ஹூங்காரமாய் சத்தமிட்டு அவை பேயாட்டம் ஆடுகின்றன! எல்லா இலைகளும் ஆடி ஆடி, ஒருவித களைப்புடனேயே இருக்கின்றன! சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சமுத்திரத்தின் அலைகளாய் இந்த ஆடிக்காற்று அடித்துக்கொண்டே இருக்கிறது! உரைக்காத வெயிலும், அவ்வப்பொழுது விழும் சாரலும் ஆடிக்காற்றின் இலவச இணைப்புகள்! இந்த ஆடிக்காற்றை இதை விட அனுபவித்த சுகமும் உண்டு! நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் , எங்கள் ஊரின் (பரமத்தி வேலூர்) காவிரி, ஆடியில் தரும் இன்பமே அலாதி தான்! காவிரி்ப் பாலத்தின் இருபுறமும் சரிந்து இறங்கும் கருங்கல் படிக்கட்டுக்களில் இறங்கும்போதே , இதோ உன்னைத் தூக்கிச்சென்று விடுவேன் என அடிக்கும் காற்று! மீறி இறங்கி, அந்த உடைந்த பிள்ளையார் கோயிலின் சிதறிக்கிடக்கும் துண்டங்களில் அமர்ந்துவிட வேண்டும்! தன்னைத் தடுக்கும் பாலத்தின் மீது பெருங்கோபமாய் அந்தக் காற்றின் சப்தம் அந்தப்பிரதேசத்தையே அதிர வைக்கும்! இறுக்கிப்பிடித்து அமர்ந்திருக்கையில், படி தொட்டு ஓடும் ஆற்றின் நீர் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, உடைந்து கிடக்கும் படித்துறையில் மோதி மேலே பன்னீராய்த் தூவ, நனைந்த உடையும் மனமும் குளிருக்கு உத்திரவாதம்! விட்டுச்செல்ல மனமின்றி, இருள் வருமுன் வீட்டிற்குத்திரும்புவோம்! காவிரியின் வறட்சியும் சாலைகளின் விரிவாக்கமும் அந்த சூழலையே மாற்றிவிட்டன! இன்று அந்த இளமையும் தொலைந்து, காவிரியும் தொலைந்து , வேற்றூரில் பக்கத்து கோயில் அரச மரமும், காற்றும் , சலசலப்பும் மட்டுமே மிச்சம்! எங்கோ பெய்யும் கனமழையின் அறிவிப்பை மட்டுமே செய்கிறது இன்று இங்கே இந்த ஆடிக்காற்று! யாரோ பாடியது போல, வெறுங் காத்துதான் வருது, சத்தத்துடன்!

Monday, May 20, 2019

வேலூர் கோமளவிலாஸும் நானும்.

வேலூரும்  நானும்  கோமளவிலாஸும் :

                            ஸ்ரீதரனாகிய  நான்,  பரமத்தி வேலூர் என்று அழைக்கப்பட்ட வேலூரில்  அரசு மருத்துவமனையில் அவதரித்த வகையில்  வேலூர்க்காரன் என்றழைக்கப்படுவதில் பெருமையடைகிறேன். ஆனாலும் 1958 முதல் கிட்டத்தட்ட 1987 வரை பிறந்து வளர்ந்து ஆளாகி புலம் பெயர்ந்து விட்டதில் வருத்தமுமுண்டு.  காவிரி அணைந்த அக்கிரஹாரத்தில் இருபத்தைந்து வருடங்கள் வாடகை வீடுகள் மாறி மாறி வாழ்ந்து, கரூரில் வேலை நிமித்தம் அமர்ந்துவிட்டதால், சொந்தவீடும் கரூரிலேயே அமைந்துவிட்டது.  இருந்தும், பாட்ஷா ரஜினி போல் ரத்தத்திலும், சதையிலும், எலும்பிலும், ஏன் மொத்த ஆன்மாவிலுமிருந்தும் வேலூர் ஊறியுள்ளது,  மொத்த நினைவுகளும், பழைய கருப்பு வெள்ளை டிவியின் கெட்டுப்போன திரை மேலிருந்து கீழே விடாது ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தாலும், சிறிதாவது அதை வய்ப்படுத்தி, சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல முயலுகிறேன்.

                               ஹிந்தி ஆசிரியர்களாக கண்டர் பள்ளியில் பணிபுரிந்த பெற்றோர் , திரு பலராமன், உஷாதேவி  அவர்களின் செல்ல புத்திரனாகிய  நான் அக்கிரஹாரத்தின் பல வீடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், ஒவ்வொரு வீட்டிற்கான நினைவுகள் தனித்தனியே என்னுள் பொதிந்துள்ளன.   எனது நினைவுகளின் அதிகபட்ட  நீட்சி, நாங்கள் வசித்த கூரை வீடு வரையே செல்கிறது.  வேலூர் அக்ரஹாரத்தின் மிகப்பெரிய ( ஏன் வேலூரின் என்று கூட சொல்லலாம்) நிலச்சுவான்தாரான அப்பையரின் வீடான அந்த வீட்டிலிருந்தே என் வேலூரின் நினைவுகள் தொடங்குகின்றன. இருந்தும், கோமளவிலாஸே இங்கு பிரதான பாத்திரமாதலால், அந்த நினைவுகளை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.                         

கோமளவிலாஸ்: (என் நினைவில் வீட்டின் அமைப்பு)

               அக்கிரஹாரத்துப் பெரிய வீடுகளில் கோமளவிலாஸும் ஒன்று! வாசலிலிருந்து கொல்லை வரை தார்சு வீடு.  சிறு மாடங்களுடன் கூடிய வாசல் திண்ணைகள், அவற்றில் சாய்ந்துகொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அதைத்தொடர்ந்து வீட்டின் அகலத்திற்கு சிமெண்ட் தரை, அதையொட்டி ஒரு புறம் சிறு திண்ணை, மறுபுறம் மாடிக்குச்செல்ல மரப்படி, மரப்படிக்குக்கீழே சிமெண்டிலேயே தலையணையுடன் கூடிய சிறு திண்ணை ( சுமார் நான்குஅடிகளுக்குள் இருக்கும்), பின் இரு புறமும் உயர்ந்த திண்ணைகள், திண்ணைகளிலிருந்து மேல் சென்று தாங்கி நிற்கும் மரத்தூண்கள், வாசல் மாடங்களுக்கும், முன் அறை சுவர்களுக்கும் நடுவிலும் திண்ணைகள், இவை வழியே இரு பக்க வீடுகளுக்கும் செல்லவும் முடியும்.  பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரக்கதவு , கதவை ஒட்டிய இருபுற ஜன்னல்கள், ஒரு புற திண்ணையிலிருந்து, ஒரு பக்க அறைக்குச் செல்ல சிறிய மரக்கதவு, (குனிந்துதான் செல்ல முடியும்).

              கதவைத்திறந்தால், ரேழி! இங்கும் ஒரு உயர்ந்த திண்ணை. கடந்து உள் செல்ல, இரு புறமும்  பெரிய ஹால், நடுவில் பெரிய தாழ்வாரம் . தாழ்வாரத்திற்கு மேல் கம்பிகளுடன் கூடிய வலை! தாழ்வாரத்தைச் சுற்றிலும் சிறு திண்ணை! மழை நீர் வடிந்து செல்ல பெரிய ஜலதாரை! தாழ்வாரத்தைச் சுற்றி சென்றால் பின்புறம் செல்ல வழி, அங்கும் ஒரு மாடிப்படி, அங்கொரு கதவு ! அதைக்கடக்க, கொல்லைப்புறம். சிமெண்ட் பாவிய தரை! இடது புறம், ஓடு வேய்ந்த ஒரு திண்ணை! இங்கும் ஒரு கதவு உண்டு. இதன் வழியும் இந்தப்பக்க போர்ஷனுக்குள் செல்லலாம்.  திண்ணைக்கு நேர்எதிரே, வலது பக்க போர்ஷனின்  சமயலறை! இங்கும் ஒரு கதவு உண்டு. இந்த சமயலறையைத்தொடர்ந்து ஒரு ஓடு வேய்ந்த திண்ணையும் அதைத் தொடர்ந்து ஒரு குளியலறையும் உண்டு! இதை ஒட்டி ஒரு கிணறும் உண்டு. தரையிலிருந்து பத்து அடிக்குள் தண்ணீர் இருக்கும்.  வாளியில் இறைத்துக் கொள்ளலாம்.

                இருபுற ஹால்களின் சுவர்கள் முழுவதும் மரப்பீரோக்கள். அவற்றின் கண்ணாடிக் கதவுகள் உள்ளே உறைந்திருக்கும் சட்டப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள், தீபாவளி மலர்கள் இவற்றை பிரகடப்படுத்திக்கொண்டிருக்கும்.  தாழ்வாரத்தை ஒட்டிய வலது புற பகுதியில், கொலு வைக்கும் போது உபயோகிக்கப்படும் தெப்பக்குளம், சிமெண்ட்டால் மூடப்பட்டிருக்கும்) இடது புற ஹாலைக்கடந்தால் ஒரு அறை, அதை ஒட்டிய ஒரு சமயலறை ( வீட்டின் ப்ரதான சமயலறை, இதனுள்ளும் மர பீரோக்கள் உண்டு), அறையைக்கடந்து செல்ல , வெந்நீர் காய்ச்சும் வசதியுடன் கூடிய ஒரு குளியலறை ( இது சற்றுப் பெரிய அறை)! இங்கிருக்கும் கதவு வழியே கொல்லைப்புறம் வரலாம். இந்தக்கதவை ஒட்டிய ஓடு வேய்ந்த திண்ணையில் மாவு அரைக்கும் கல் பதிக்கப்பட்டிருக்கும். இதைத்தாண்டி இடது புறம், ஓடு வேய்ந்த ஒரு நீளமான பகுதியில் பெரிய அளவில் சமையல் செய்ய வசதியுடன் கூடிய தரையில் நீள வாக்கில் குழி பறிக்கப்பட்டு விறகு கொண்டு சமைக்க வசதி யிருக்கும்.  இங்கு ஒரு ராமபாணக்கொடி ஒன்று ஓங்கிப்படர்ந்திருக்கும்.  இதில் பூப்பறிப்பதற்கு ஒரு கோஷ்டியே உண்டு.  இதைத்தொடர்ந்து பின் புறம் உயர்ந்த சுவரும் நடுவில் ஒரு கதவும் இருக்கும். அதைக்கடந்து செல்ல, மாட்டுத்தொழுவமும் , ஒரு சிறு கழிவறையும் உண்டு. (அந்தக்கால சிமெண்ட்டாலான வெஸ்டர்ன் டாய்லட்,  தரையிலேயே பதிக்கப்பட்டிருக்கும்!) பின் தென்னை மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பு!

                   வாசல் மரப்படி வழியே சத்தத்துடன் ஏறிச் செல்ல, கூரை வேயப்பட்ட நீள வாக்கில் மூன்று அறைகள். இதில் கடைசி அறையில், கட்டில் போடப்பட்டு, திரு சின்னி அவர்கள் வேலூர் வரும்பொழுது தங்குவதற்கான வசதியுடன் இருக்கும்.  இந்த அறைகளைத்தொடர்ந்து பின் புற மொட்டை மாடியும், இங்கிருந்து கீழே செல்ல மாடிப்படியும் உண்டு. (தாழ்வாரத்திலிருந்து கொல்லைப்புறம் செல்லும் வழியில் நாம் பார்த்த மாடிப்படி தான்). இந்த அறைகளுக்கு முன்புறமும் கூரை வேய்ந்த பந்தலும். ஒரு மொட்டை மாடியும் பின் வாசல் புற கைப்பிடிச்சுவரும் உண்டு.

                         இனி நினைவுகள் தொடரட்டும்! 1975 ல் கோமளவிலாஸத்திற்கு வசிக்கச் சென்றாலும், அதற்கு இரு வருடங்கள் முன்பே இந்த வீட்டில் எங்கள் வீட்டின் முக்கிய நிகழ்வுகள் நடந்தன. எனது பெரிய தமக்கை ரமாவின் திருமணமும், எனது பூணூல் வைபவமும் இங்குதான் நடந்தேறின! நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம்.  தாழ்வாரம் தான் மணமேடை! இருபுறமும் சுற்றம் நிறைந்திருக்க நிகழ்ச்சிகள் நடந்தன.  ஹாலில் தான் இலை போட்டு சாப்பாடு.

                               வாசலில் ஒரு திண்ணையில் நாதஸ்வரம். மறு திண்ணையில் ரசிகர்கள்.  அவ்வளவு பேரும் இருக்கும் இடத்தில் அனுசரித்துக் கொண்டு, நிகழ்ச்சிகள் ஒரு வில்லங்கமும் இல்லாமல் நடந்தன. AC ரூம் தேவையாயில்லை, வெஸ்டர்ன் டாய்லட் தேவையாயில்லை, சாப்பிட டேபிள் சேர் தேவையாயில்லை, வந்து செல்ல கால் டாக்சிகள் தேவையாயில்லை! என்ன இருந்ததோ , அதற்குள் இயைந்த வாழ்க்கை! நினைவுகள் வெரும் பெரும்மூச்சுக்களையே உற்பத்தி செய்கின்றன.

                           நாங்கள் அங்கு குடி பெயர்ந்தபோது, வலது புற போர்ஷனில், மின்வாரிய S.O. திரு சுப்ரமணியமும் அவர் மனைவி மீனாட்சி மாமியும் குடியிருந்தார்கள். தினமும் விடாமல், அவரது சைக்கிளுக்கு எண்ணெய் விட்டு பள பள வென்று அவர் துடைப்பதை வேடிக்கைப்பார்ப்பதே ஒரு அனுபவம். அவர் வீட்டில் தங்கிப்படித்து வந்த சங்கருடனும் நெருங்கிய நட்பு உண்டு.

                           எங்களுக்கானது ஒரு ஹால், அதையொட்டிய ஒரு அறை, அதனுள்ளிருந்து பிரியும் ஒரு சிறு சமயலறை, வெந்நீர் காய்ச்ச வசதியுள்ள குளியலறை மட்டுமே! ஆட்டுக்கல் இருந்த திண்ணை பொது. ஹாலில் தாத்தா திம்மப்பையரின் டேபிள், அதன் மேல் ஒரு ட்ரான்ஸிஸ்டர் மட்டுமே! இந்த டேபிள் தான் வரலக்ஷ்மி விரதத்திற்கான (திருப்பிப்போடப்பட்டு) மண்டபமாகவும் மாறும்.  ஹாலில் புதிதாக வாங்கிய கணேஷ் சீலிங் பேன் உத்தரத்தில் தொங்கியது.( இன்னும் இது என் வீட்டில் உபயோகத்தில் உள்ளது!). பின்பு இந்த வீட்டில் தான் HMV calipso  கிராமபோன் பெட்டியும் வீட்டிற்கு வந்தது.

                           ஹாலில் படுக்கை! குளிர்காலத்திற்கு பனியிலிருந்து காத்துக்கொள்ள பெரிய பாய்கள் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும்! இரவில் கழற்றிவிடப்பட்டு, காலையில் சுருட்டிக்கட்டப்படும். பம்பிங் ஸ்டவ் சமையல். எனக்குப்படிக்க, மாடியில் இருந்த அறை, வாசல் திண்ணைகள், மொட்டை மாடி என்று ஏகப்பட்ட இடங்கள்! தேர்வு எழுதினால், பாஸாகிவிடும் அளவிற்கு கோமளவிலாஸின் திண்ணைகளுக்கும், சுவர்களுக்கும், மொட்டை மாடித்தளங்களுக்கும் என் பாடங்கள் பரிச்சயம். சாய்ப்ரசாத், கந்தசாமி போன்ற நண்பர்களுடன் குரூப் ஸ்டடி செய்ய, மாடியில் இருந்த கடைசி ரூம்.

                         மொட்டை மாடிக்கும், கடைசி அறைக்கும் பங்கு தாரர்கள் உண்டு! கோவில் அய்யங்கார் மாமா வீட்டு நாராயணன் அண்ணன் , அவர்கள் வீட்டில் தங்கி M.Com.,  படித்துக்கொண்டிருந்த சாரங்கன், பாண்டமங்கலம் ஸ்ரீநிவாசன், குமரன் பிரஸ் முருகேசன்,கம்பெளண்டர் வீட்டு அஷோக் முதலானோருக்கும் அங்கு தான் வாசம்.  முருகேசனின் ரேடியோவில், விடியல் காலையில் வெஸிட் இண்டீஸ் கிரிக்கெட் காமெண்டரி கேட்பது அந்த மொட்டை மாடியில் சுவாரஸ்யம்.  கோயில் மாமா சென்னை சென்ற பிறகு கோயில் நிர்வகிக்க வந்த திரு KRV ராமன் அவர்களின் புதல்வர்கள் தேசிகன், வரதராஜன் முதலானோர் அனைவரும் இந்த மொட்டை மாடியில் படித்துள்ளார்கள்.  தினமும் கோயிலில் ( கோமளவிலாஸ் குடும்பத்தாரால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்த ஸ்ரீ லஷ்மிநாரயணப்பெருமாள் கோயிலில் தினமும் சகஸ்ரநாமம் சொல்லி வலம் வரும் பழக்கம் திரு ராமன் அவர்களால் செவ்வனே நடந்தது! கோயில் மடப்பள்ளி சுவரை ஸ்டம்பாகப் பயன்படுத்தி, அந்தப்பிரகாரம் தான் எங்கள் கிரிக்கெட் க்ரெளவுண்ட்.

                       
                           கோமளவிலாஸில் எங்களுடன் இருந்த ஒரு முக்கிய நபர் குண்டன்  என்று செல்லமாக அழைக்கப்பட்ட வெள்ளைப்பூனை! யாருக்கும் அஞ்சாத குண்டன் என் அப்பாவின் காலடிசத்தத்தைக் கேட்டாலே, ஓடி ஒளிந்து கொள்ளும் லாகவம், தோசை, அடை முதலான எண்ணெய்ப்பலகாரங்கள் செய்யப்படும் பொழுது, ஸ்டவ் முன் தவம் செய்தபடி நின்றுகொண்டிருக்கும் பரிதாபம், இப்படி எங்கள் வாழ்வுடன் கலந்திருந்த அந்தக் குண்டன் ஒரு நாள் காணாமல் போனவன் திரும்ப வரவேயில்லை!

                           மாலைப்பொழுதில் ட்யூஷன் படிக்க வரும் மாணவர்களால் நிரம்பி வழியும் ஹால். அம்மாவிடம் படிப்பவர்கள், அப்பாவிடம் படிப்பவர்கள் என்று களை கட்டியிருக்கும். வேலூரில் இன்றும் ஐம்பது வயதைக்கடந்தவர்கள், அநேகமாக கோமளவிலாஸ் பற்றி அறிந்திருப்பார்கள்.

                               கோயில் அய்யங்கார் வீட்டுப் பின்புறம் இருந்த காலி நிலத்தில் நாங்கள் பராமரித்த வீட்டுத்தோட்டத்தில், எல்லா காய் கறிகளுமே பயிரிட்டோம்.  கிணற்றிலிருந்து நீர் இறைத்து ஊற்ற ஒரு சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டது. இறைத்து ஊற்றப்ப்டும் நீர் சுவற்றிற்கு அந்தப்புறம் வழிந்து, கால்வாய் வழியே எல்லாச்செடிகளுக்கும் பாயும்.  TV என்ற ஒன்று அன்று இல்லாதிருந்ததாலேயே இது சாத்தியாமானது என்று நிச்சயமாகச்சொல்லலாம்.

                       
                             1978ல் மேற்படிப்பிற்காக கோவை சென்ற இரண்டு வருடங்கள் கோமளவிலாஸுடன் அதிக தொடர்பு எனக்கு இருக்கவில்லை. விடுமுறைகளில் ஊருக்கு வருவதுதான்.  1981 ல் காரைக்குடியிலிருந்து கரூர் மாற்றலாகி வந்த பின் மீண்டும் வாசம்.  காரைக்குடியில் இருந்த பொழுதே வீட்டிற்கு காரைக்குடியிலிருந்து Panasonic 565  Two in one வந்திருந்தது. அப்பாவின் பொழுது போக்கே ரேடியோவிலிருந்து கேஸட் ரிகார்ட் செய்வதும், ஒவ்வொரு பாட்டுக்கும் அதன் கவுண்டர் ரீடிங்கை எழுதிவைப்பதும் தான்.

                கோமளவிலாஸின் எங்கள் நினைவுப் பரிசாய், திரு. சின்னி அவர்களால் வழங்கப்பட்ட இரண்டு மர பெஞ்சுகள் என் வீட்டின் முக்கிய வஸ்துக்களாய் இன்னும் கொலு வீற்றிருக்கின்றன!


                                கோமளவிலாஸில் என் வாழ்க்கையின் மற்றொரு முக்கிய திருப்பம் நிகழ்ந்தது.  என்து ஓன்றுவிட்ட அக்கா மகளுடன் (பூமா) என் திருமணத்திற்கான விதை இங்கு தான் ஊன்றப்பட்டது. இந்த மே 18 உடன் 36 வருட வாழ்க்கை ஓடிவிட்டது. திருமணங்களுக்கும் கோமளவிலாஸிற்கும் இருந்த ஒரு மாயப் பிணைப்பே, அங்கு ஒரு திருமண மண்டபம் வர காரணமாயிருந்திருக்க வேண்டும். இன்னும் பல நினைவுகள் எழுந்தபோதும், இன்னும் எழுதுவது அஜீரணமாகிவிடும் என்ற பயத்தால், ஸ்ரீ லக்ஷ்மிநாராயணரின் அருளுடன் விடை பெற்றுக்கொள்கிறேன்.

                 கோமளவிலாஸில் என் தமக்கையின் சில திருமணப்புகைப்படங்கள்!

வரலக்ஷ்மி பூஜையில் அப்பா

திருமணம் நடந்த தாழ்வாரம் , எனது அம்மாவின் இடப்புறத்தில் நான் சட்டையில்லாமல்.

சமயலறையின் பூஜை ரூமில் பூஜை

கோமளவிலாஸின் வாயிலின் ஒரு பகுதி!

கோமளவிலாஸ் மொட்டைமாடியிலிருந்து காசி யாத்திரை



                       



                           


   




                     


           



           

:


Tuesday, April 23, 2019

எனக்கு சாப்பிடும் பொழுது , இடது கையில் அவசியம் எதாவது படிக்க இருக்க வேண்டும்! என் அம்மாவிடமிருந்து எனக்கும் என் தமக்கைக்கும் தொற்றிக்கொண்ட பழக்கம்! அது பேப்பர் துணுக்காகக் கூட இருக்கலாம்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு இந்தப் பழக்கம் எப்படியோ விடுபட்டுவிட்டது! இப்பொழுது சாப்பிடும்பொழுது தொல்லைக்காட்சிதான்! பள்ளிப்பருவத்தில் முத்து காமிக்ஸ் மீது வெறி உண்டு! கண்ணன், அம்புலிமாமா பருவம் முடித்ததும், கோடை விடுமுறையில் பள்ளி நூலகத்தில் ஈசாப், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன! விகடன், குமுதத்தில் ஜோக்குகள் படிக்க அனுமதி! தீபாவளி மலர்களின் மரிக்கொழுந்து வாசம் நுகரலாம்! பின் கல்லூரிக் காலங்களில் கல்கியில் பொன்னியின் செல்வன், குமுதத்தில் சாண்டில்யன், பட்டாம்பூச்சியெல்லாம் அறிமுகம்! பின் வாசிப்பு வார இதழ்களின் மற்ற கதைகளிலும் தொடர்ந்தது! நாபா,மணியன்,சாவி, சிவசங்கரி,இந்துமதி , சுஜாதா போன்றோர் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள்! ராணிமுத்து மாத இதழும் பெரிதும் விரும்பப்பட்டது! பின் மாத நாவல்களின் பெருக்கத்தில் எழுத்துக்களின் மலினத்தில் ஈர்ப்பு குறையத்தொடங்கியது! கல்லூரிக்காலங்களில் அக்கா மூலம் R K நாராயணும், 80 களின் இறுதியில் அலுவலக நண்பர் மூலம் சிட்னி ஷெல்டனும் அறிமுகம்! இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் R K நாராயணனின் வாரத்தொடர்கள் வசீகரித்தன! பின்னர் மிர்ரர், தி வீக் போன்ற இதழ்கள்! அப்பா மூலம் ஹிந்தி படித்ததால், ஹிந் பாக்கட் புக்ஸ் மாதம் மாதம் வரவழைத்து ஹிந்தி நாவல்களும் கல்லூரிக் காலத்திலேயே அறிமுகம்! அப்பாவின் வருமானத்தில் ஒரு பகுதி புத்தகங்களுக்காக ஆனது என்றதால் வீட்டின் பெரும்பாலான அசையும் சொத்துக்கள் புத்தகங்களாகவே இருந்தன! கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் புத்தகங்களே அதிகம்! வீட்டில் எல்லோருமே படித்ததால் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், இவை இனிய சுமையாகவே இருந்தன! அம்மா பெயரில் இன்றும் அமுதசுரபி வந்துகொண்டிருக்கிறது! (அம்மா இறந்து பத்து வருடங்கள் ஆகப் போகின்றன). விகடன், குமுதம் தடம் மாறியதால் அவை வாங்கும் வழக்கொழிந்தது. தற்பொழுதும் பீரோ புத்தகங்களால் நிரம்பி வழிகின்றன! புத்தகக்கடைக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கும் இப்பொழுது தடா போடப்பட்டு விட்டது! பாதுகாப்புச்சிக்கல்கள் தான்! அதுவுமில்லாமல் டிஜிடல் புத்தகங்கள் கணக்கற்ற அளவில் பதிவிறக்கம் செய்வதால், அவை கம்ப்யூட்டரின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன! கண்கள் உலர்வதால் அவற்றைப்படிக்கவும் இயலவில்லை! நிஜப்புத்தகங்கள் இரண்டு பக்கம் தாண்டுவதற்குள் தூக்கம் வேறு வந்துவிடுகிறது! கனமான புத்தகங்கள் கை வலிக்கவும் செய்கின்றன! உடையாரை வாசித்து, ராஜராஜனை சுவாசித்து, பெரிய கோயிலின் சுவற்றை நான் தடவியதும் நடந்தது! என் தந்தை சர்க்கரை நோயினால் கண்கள் பாதிக்கப்பட்டதால் படிக்க இயலாமல் போனதே அவருக்குப் பெரும் துயரமாக இருந்தது! லைட் வைத்த பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் படித்துள்ளார்! ( இன்றும் அதை வைத்துள்ளேன்!) இது நாள் வரை படித்ததற்கும், இனி படிக்க வாய்ப்பளிக்கப்போவதற்காகவும் இறைவனுக்கு நன்றிகள்! படிப்பது பிடிக்கும் மனையாளைக் கொடுத்ததற்கும் மேலும் நன்றிகள்! வரைவதில் நாட்டம் அதிகமாகிவிட்டதால், படிப்பது குறைந்து விட்டது! எனினும் படித்துக்கொண்டே இருப்பேன்! அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துக்கள்!

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...