சென்ற ஞாயிறு அன்று மீண்டும் வேலூர் செல்ல நேர்ந்தது. மீண்டும் காவிரி... இந்த முறை பிள்ளையாரை மறக்கவில்லை. முதலிலேயே அவரைப்பார்த்து விடுவது என்ற முடிவுடன் காரை பாலம் தாண்டியவுடன் நிறுத்திவிட்டேன். ஸ்ரீனிவாசனும் (பெரிய) எங்களுடன் (நான், பூமா மற்றும் ஹரி) வந்திருந்தான். பிள்ளயரைப்பார்க்க வசதியாக படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால் கோயில் தான் எல்லாம் மாறி விட்டது. அரச மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மணிகளைக் காணவில்லை. பிள்ளையாருக்குத் துணையாக குடிமகனொருவன் பின்புறமாக உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலுக்கு பின்புறமிருந்த ஓடையில் (குடத்தில் நாங்கள் நீர் மொண்ட) சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அந்தோ... கோயிலிலிருந்து வாய்க்கால் வரை சென்ற அந்த ஒற்றையடிப்பாதையைக் காணவில்லை. புதர்கள் மண்டி பாதை இருந்த சுவடே தெரியவில்லை. கோயிலின் அருகில் இருந்த அந்த செங்கல்லினால் கட்டப்பட்ட வாய்க்கால் பாலம் மட்டும் அப்படியே இரு(டி)ந்துகொண்டு .....ம்ம் ..பாலம் வழியே காவிரிக்கு செல்லும் வழியைக் காணவில்லை. மீண்டும் புதர்கள்.. நிறைய விஷயங்களைக் காணவில்லை. ஆனால் ... அந்த பசுமை.... வாழையும், தென்னையும், வெற்றிலையும் மட்டும்தான் வேலுரை இன்னும் வேலூராக வைத்துள்ளது.