Monday, July 3, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தைந்தாவது ஸர்கம்.

 

              ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தைந்தாவது ஸர்கம்.

 

     அந்த அரக்கியரின் கடுமையான, கருணையற்ற வார்த்தைகளால், தைரியம் இழந்த ஜனகனின் மகளான சீதை, அழுது கொண்டிருந்தாள்.

     விதேஹ நாட்டு அரச குமாரியான, மனதினிற்கினிய சீதை, அரக்கியரின் பேச்சுக்களால் முற்றிலும் அச்சம் கொண்டு, கண்களில் நீர் வழிய, தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கினாள்.

     “ஹே அரக்கியரே! மானுடப் பெண், எந்த சூழலிலும், ஒரு அரக்கனுக்கு மனைவியாக முடியாது.  நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னைச் சாப்பிட விரும்பினாலும், உங்களது பேச்சை நான் கேட்க மாட்டேன்.” என்றாள்.

     அரக்கியரின் நடுவே அமர்ந்திருந்த தேவ மங்கையொத்த சீதை, இராவணனால் தூண்டப்பட்ட அரக்கியரால் அச்சுறுத்தப்பட்டதால், துயரம் மேலோங்க, அமைதியிழந்து, வருத்தத்துடன், ஆதரவற்ற நிலையில் இருந்தாள்.

     காட்டில் தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண் மான் ஒன்று, ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கித் தவிப்பது போல், சீதை மிகவும் துடித்துக் கொண்டிருந்தாள்.  தன் உடல் பகுதிகள் அனைத்தையும் குறுக்கிக் கொண்டு, உடலை ஒடுக்கிக் கொண்டாள்.  அவளது உடல் பாகங்கள் அனைத்தும் உடலுடன் ஒட்டிக்கொண்டது போல ஆகிவிட்டன. 

     சீதை மனம் உடைந்த நிலையில், சோகமே வடிவாக, தன் கணவனை நினைத்துக் கொண்டே, பூத்துக் குலுங்கிய ஒரு பெரிய அசோக மரத்தின் கிளையைப் பற்றியவாறு நின்றிருந்தாள்.

     சீதையின் கண்களில் பெருகிய கண்ணீர் அவளது மார்பகங்களை நனைத்திருந்தது.  அவளது எண்ணமெல்லாம் கவலையில் தோய்ந்திருக்க, அவளது துயரம் எல்லையற்றதாய் இருந்தது. 

     அரக்கியரின் அச்சுறுத்தலுக்குப் பயந்த சீதை, வீசும் சூறைக்காற்றில் வேருடன் சாய்ந்து வீழும் வாழை மரம் போல, களையிழந்து நின்றிருந்தாள்.

     சீதையின் அடர்ந்து, நீண்டு, வளர்ந்திருந்த தலைமுடியும் அவளது துயரத்தைப் பிரதிபலிப்பது போல வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போது, வளைந்து, சீறிக்கொண்டு நெளிந்து செல்லும் ஒரு பெண் பாம்பைப் போல இருந்தது.

     துயரத்தில் நிலை குலைந்திருந்த சீதை, கவலை நிறைந்த மனத்துடன், கோபமும் சேர்ந்து கொள்ள, நினைவிழக்கும் நிலைக்குச் சென்றாள். பிறகு அவள் புலம்பத் தொடங்கினாள்.

     அந்த அழகுப் பதுமையான சீதை, துயரம் மிக்கவளாய், ஹே ராமா! என்றும், ஹே லக்ஷ்மணா! என்றும், தன் மாமியாரை நினைத்தவளாய், ஹே கெளசல்யா! என்றும், ஹே சுமித்ரா! என்றும் அழைத்தவாறு புலம்பினாள்.

     “ராமனைப் பிரிந்திருக்கும் நான், இந்தக் கொடூரமான அரக்கியரின் துன்புறுத்தல்களைச் சகித்துக்கொண்டு, ஒரு முகூர்த்த நேரம் கூட உயிர் தரித்திருக்க இயலாது. என்றாலும், கற்றறிந்த ஆன்றோர்கள் அனைவருக்கும் உரைத்துள்ள படி, ஆணுக்கோ, பெண்ணுக்கோ மரணம் என்பது அவரவர்களுக்கான காலம் வரும் போதுதான் நிகழும். “

     “நல் வினைகள் ஏதும் புரிந்திராது, இழி நிலையில் இருக்கும் நான், பாரம் சுமந்து செல்லும் கப்பல், கடலில், சுழற்காற்றில் சிக்கி, சின்னாபின்னமாவது போல அழிந்து விடுவேன்.”

     “அரக்கியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான், என்னுடைய கணவனைக் காண முடியாமல், பெரு வெள்ளத்தில் கரைந்து விடும் ஆற்றின் கரைகள் போல துயரத்தில் உள்ளேன்.”

     “தாமரையின் மலர்ந்த இதழொத்த அழகிய கண்களைக் கொண்டவரும், சிங்கத்தின் கம்பீரமான நடையைக் கொண்டவரும், கருணை மிக்கவரும், இன்சொல் உரைப்பவருமான என் அன்பிற்குரிய கணவனை, இன்று கண்களால் காண முடிந்தவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.”

     “கொடிய நஞ்சுண்டவன் உயிர் வாழ்வது இயலாதது போல, தன்னை யறிந்த ஆத்ம ஞானியான என் கணவரைப் பிரிந்து நான் உயிர் வாழ்தல் என்பது அரிய செயலாகும்.”

     “முற்பிறவியில் என்னால் செய்யப்பட்ட தீவினைகளின் பயனாகவே, இப்பொழுது, இவ்வளவு கடினமான துன்பங்களை நான் அனுபவிக்க வேண்டியுள்ளது.”

     “இந்தக் கொடிய அரக்கியரின் பிடியில் இருக்கும் நான், என்னுடைய உயிர் நாயகனான ஸ்ரீராமனை ஒரு பொழுதும் இனி பார்க்க முடியாது.  ஆகவே, பெருந்துயரத்தில் வீழ்ந்துள்ள நான், என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறேன்.”

     “நினைத்த மாத்திரத்தில் உயிரை விட்டு விட முடியாது, பிறரது கட்டுப்பாட்டில் இருக்கும் எனது மானுடப் பிறப்பின் இழி நிலையை நான் என்னவென்று இகழ்வேன்?”

     இவ்வாறாக சீதை தன் துயரத்தை வெளிப்படுத்தினாள்.

                               

                                          இருபத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...