Wednesday, December 16, 2009

மார்கழி மாதம்.... திரும்பிப்பார்க்கின்றேன்....
இன்று இன்னுமொரு மார்கழி மாதம் பிறந்துள்ளது. வேலூர் அக்ரஹாரவாசிகளுக்கு மார்கழி மாதம் தனி தான்.. (கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் கதை! (அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.. சரித்திரம் ஆகி விட்டதல்லவா? மார்கழி மாதம் என்றால் இரண்டு விசேஷங்கள்.. ஒன்று பஜனை.. மற்றொண்டு அரையாண்டுத்தேர்வு...
மார்கழி மாத பஜனை..
வேலூர் லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில்...
அர்ச்சகர் வீரராகவ ஐயங்கார்...
வெண் பொங்கல்... ஆஹா... முழங்கை நெய்சோர நீங்கள் பொங்கல் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அப்பா தான் பஜனைக்கு அணித்தலைவர். விடியல் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து அந்த சாம்பல் நிற ஹரே ராமா சால்வையை போர்த்துக்கொண்டு அப்பா கோயிலுக்கு சென்று விடுவார். நான் எப்பவுமே லேட்தான். அப்பா விட்டுவிட்டு சென்று விட்டார் என்ற கோபத்தில் சீக்கிரம் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றால் அங்கே அடுத்த அதிர்ச்சி காத்திருக்கும்! என் தோழன் முரளி கிருஷ்ணன் என் பிரிய சுருதி பெட்டியை கைப்பற்றி இருப்பான். சீக்கிரம் வந்ததால் அவனுக்குத் தான் முதல் வாய்ப்பு என்று அப்பா சொல்லிவிடுவார். கோயிலை வலம் வந்து பஜனை கிளம்பும். நான்கைந்து பேர்களுடன் ஆரம்பிக்கும் பஜனை பின் தெருவில் ஒவ்வொருவராக சேர்ந்து கொள்ள பெரிய goshtiyaaga (கொஞ்சம் அதிகம் தான்..) மாறி விடும். ஐயர் வீட்டு திருப்பத்தில் இன்னொரு
அக்ரஹாரத்தில் நுழையும் போது சுருதிப்பெட்டி எனக்கு கை மாறிய பிறகுதான் பஜனையில் என் கவனம் செல்லும். சின்னு செட்டியார் வீட்டோடு மீண்டும் திரும்பி கோயிலுக்கு செல்லும் பஜனை கோஷ்டி. மீண்டும் கோயிலை அடையும் பொழுது கோஷ்டி இன்னும் பெரியதாக மாறி இருக்கும். அப்பா "சுத்தப்ரம்ம பராத்பர ராம்' பாடத் தொடங்கும் போது , கிழக்குத்தெரு பையன்கள் பக்கத்து காம்பவுண்ட் சுவர் ஏறி, பெரிய பூவரச இலைகளைப்பறித்து அனைவருக்கும் விநியோகம் செய்துவிடுவார்கள். ஹரியோ ஹரி பாடி முடித்ததும், வீர ராகவ ஐயங்கார் மடப்பள்ளியிலிருந்து பெரிய பாத்திரத்தில் சுவாமிக்கு நெய்வேதனம் செய்ய பொங்கல் பிரசாதம் எடுத்து வந்து பூஜை நடக்கும். சுடச்சுட அந்தப் பொங்கலை ஐயங்கார் மாமா கையைஊதி ஊதி ஒவ்வொருவருக்கும் விநியோகம் செய்வதே தனி கலையாக இருக்கும்.
இப்பொழுது அப்பாவும் இல்லை, வேலூர் agrahaaramum இல்லை, ஐயங்கார் மாமாவும் இல்லை, பஜனையும் இல்லை. எல்லோரும் வேறு veru thisaiyil பயணித்து விட்டோம். ஆனால் மார்கழி மாதத்து நினைவுகள் என்றுமே என்னை விட்டு அகலப்போவதில்லை...

3 comments:

geethasrinivasan said...

ஆமாம் ,இன்னொரு மார்கழி மாதம் வந்து விட்டது.எப்போதும் போல் நான் மட்டும் பெரிய புள்ளிக் கோலம் போட்டு விட்டு நானே அதைப் பார்த்து ரசித்து விட்டு வாசல் கேட்டை மூடும் போது அக்ரகாரத்தின் நினைவுகள் கண்களின் கடைக்கோடியில் சிறு துளியை கசிய விட முயற்சிக்கிறது.முந்தாநாளும் அதே வாசல் .சிறு பெண்ணைப்போல் பழைய கோல நோட்டைத் தேடி பெரிய கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தால் எதிர் வீட்டுப் பெண் ஏதோ விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தாள்.சரி விடு ,என்று வந்தால் என் மகள்'" என்னம்மா பெரிய கோலம்,?" என்று கேள்விக்கணை தொடுத்தாள்.கோபத்தை அடக்கிக்கொண்டு மெதுவாக சொன்னேன் .அம்மாவின் கோலம் ட்ரைனிங் என் கற்பனையை கண்டிப்பாக வளர்த்து இருக்கிறது.ஆனால் கடைசி வரை போன வருஷம் கூட நான் போட்ட கோலத்தை அம்மா பாராட்டியதே இல்லை.ஆனால் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவார்."கோல அழகியை கூப்பிடடி பந்தலுக்கு என்றால் கீதா தான் என்று என் நாத்தனாரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார்.

RAMA RAMANAN said...
This comment has been removed by the author.
RAMA RAMANAN said...

ஆம். நாம் மூவரும் ஒரே பெற்றோரின் மக்களாக இருந்தாலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறோம் என்று நான் நினைத்ததுண்டு. இவ்வுலகை நாம் பார்த்து, ரசித்து , நினைவில் வைத்து, வெளியில் சொல்லும் விதத்தைப்பார்த்தால் வேற்றுமைகளை மீறிய ஒற்றுமை தான் தென்படுகிறது. நீயும் கீதாவும் எழுதியதற்கு மேல் இன்னும் சேர்க்க என்று ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது.
இப்பொழுது எல்லாம் போனில் கூட பேசவேண்டிய அவசியமே இல்லை போல் இருக்கிறது. போனில் பேசும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை.
கடிதம் எழுதும் காலம் ஒரேயடியாக செத்து விட்டது என்று நான் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். இப்போது மீண்டும் இன்னும் வீரியத்துடன் அது வந்து விட்டது போல் இருக்கிறது. இந்த உலகில் எதுவுமே சாவதில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...