ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.
ஏழாவது ஸர்கம்.
புஷ்பக விமானத்தைக் கண்ணுற்றல்
மழைக்காலத்தில் ஆகாயத்தில் பறவைக்கூட்டங்களுடனும்,
மின்னல்களுடனும் கூடியதான மேகக்கூட்டங்களின் வரிசையைப்போல, வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்டு
தங்கத்தால் செய்யப்பட்டு மின்னிக்கொண்டிருக்கும் ஜன்னல்களைக் கொண்ட வீடுகளின் வரிசையை,
வலிமைமிக்க ஸ்ரீஅனுமன் கண்டார்.
அங்கே பற்பலவிதமான
அரங்கங்களையும், வில், சங்கு போன்ற ஆயுதங்கள் இருக்கும் அரங்குகளையும், அளவிற் பெரியதான
கூடங்களையும், மாடங்களையுமுடைய வீடுகளையும், மலையைப் போன்ற உயரம் மிக்க வீடுகளின் மேல்
நிலாமுற்றங்களையும் கண்டார்.
தேவர்கள் மற்றும் அசுரர்களால் போற்றப்படுவதாகவும்,
யாதொருவகையான குற்றமற்றதாகவும், பலவிதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும்,
ஆற்றலினால் பெறப்பட்டதாகவும் அந்த வீடுகள் விளங்கியதை அந்த வானரர் கண்டார்.
பெரும் முயற்சியால்
கட்டப்பட்ட அந்த இலங்கையரசனின் வீடுகள், மயனால்
கட்டப்பட்டவை போலவும், இந்த நிலவுலகத்தின் எல்லாவிதமான நற்பேறுகளையும் பெற்றவயாகவும்
விளங்கியதை அவர் கண்டார்.
பிறகு அவர்,
உயரத்தில் இருக்கும் மேகம் போன்று காட்சிக்கினியதாகவும், தங்கம் போல ஒளிர்வதும், இராவணனின்
ஆற்றலையும் பெருமையையும் பறைசாற்றுவதாகவும் இருக்கும் அவனது மாளிகை போன்ற புஷ்பக விமானத்தைக்
கண்டார்.
நல்லோருலகமே(ஸ்வர்க்கம்)
பூவுலகில் வந்திறங்கியதை போல இருந்த அந்த விமானம், திருவருள் மிகநிரம்பப்பெற்றதாகவும்,
பலவிதமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு ஒளிரக்கூடியதாகவும், விதவிதமான மரங்களின் பூக்களாலும்
அவற்றின் மகரந்தங்களாலும் அழகுற விளங்கும் மலையுச்சியைப் போலவும் இருந்தது.
மின்னல்களால் ஒளிரும் மேகம்போல, ஒளிமிகுந்த உயர்குலப் பெண்களால் நிரம்பியிருந்த அந்த விமானமானது, திருவருள் நிரம்பப்பெற்று, மிகச்சிறப்பான அன்னப்பறவைகளால் தாங்கப்பட்டிருப்பது போலவும், வான்வழியே பயணம் செய்யும் நற்செயலாற்றியோர் விமானம் போலவும் விளங்கியதைக் கண்டார்.
அந்த விமானத்தின்
தரைப்பகுதியில் வரிசையான மலைகளும், அந்த மலைகளில் அடர்த்தியான மரங்களும், அந்த மரங்களில்
பலவண்ணப்ப் பூக்களும், அந்த பூக்களில் செந்நிறமான இதழ்களும் மகரந்தங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மேலும் அந்த விமானத்தில், வெண்மையான அரங்கங்களும்,
அழகிய மலர்கள் பூத்துக்குலுங்கும் வாவிகளும், செந்தாமரை மலர்களும், வியப்பளிக்கும்
காடுகளும், ஓடைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
பலவிதமான இரத்தினக்கற்களால்
ஒளிமயமாக விளங்கிக்கொண்டும், மிகச் சிறந்த மாளிகைகளுக்குள் மிகவும் சிறந்ததாக விளங்கிக்கொண்டும்,
புஷ்பகம் என்னும் பெயருடன் விளங்கிக்கொண்டுமிருந்த அந்த விமானத்தை அந்தப் பெரும் வானரர்
பார்த்தார்.
மேலும் அந்த
விமானத்தினுள், வெள்ளி, பவழம், மற்றும் வைடூரியக்கற்களால் அழகுற செய்யப்பட்ட பறவைகளின்
உருவங்களும், பல்வேறு இரத்தினக்கற்களால் புனையப்பட்ட பாம்புகளின் உருவங்களும், தமது
மேலான இனத்திற்கேற்ற வடிவழகுடன் செய்யப்பட்ட குதிரை உருவங்களும் இருந்ததைக் கண்டார்.
அங்கு வரையப்பட்டிருந்த பறவைகளின் இறகுகளில் தங்கம்,
பவளம் போன்றவற்றால் சித்தரிக்கப்பட்ட பூக்கள் இருந்தன. அந்தப்பறவைகள் விதவிதமாகத் தங்கள்
இறக்கைகளை சாய்த்தும் விரித்தும் விளையாடுவது போல வரையப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்பொழுது,
அவை மன்மதனுக்கு உதவும் வண்ணம் அவ்வாறு இருந்தனவோ என்று தோன்றியது.
தாமரைப்பூக்கள்
நிறைந்த வாவியுனுள், தங்கள் மேல் தாமரை இதழ்களை சுமந்துகொண்டும், தங்களது அழகிய தும்பிக்கைகளில்
கருநெய்தலிலைகளைக் கொண்டும் விளங்கிய யானைகளுடைய படங்களும், தனது அழகிய கரங்களில் தாமரை
மலர்களைக் கொண்டிருந்த லக்ஷ்மிதேவியின் படமும் அங்கே வரையப்பட்டிருந்தது.
அழகான குகைகளையுடைய மலையைப்போலவும், வசந்தகாலத்து அழகிய, நறுமணம் வீசும் மரங்களைப் போலவும் அற்புதமாக விளங்கிய அந்த விமானத்தின் அருகில் நெருங்கிச் சென்று, ஸ்ரீஅனுமன் மிகவும் வியப்புடன் அதைப் பார்த்தார்.
சிறந்த அறிவாற்றலும்,
நல்லொழுக்கமும், நன்னோக்கமும் கொண்டவரான ஸ்ரீஅனுமன், பல இடங்களில் அலைந்து தேடியவராய்,
ஜனகனின் மகளின் இருப்பிடத்தைக் காண முடியாதவராய், பெரும் மனக்கலக்கத்தோடு துன்பம் கொண்டவரானார்.
ஏழாவது
ஸர்கம் நிறைவு.

1 comment:
ஜெய் ஸ்ரீராம்..!!🙏
ஜெய் ஸ்ரீஹனுமான்...!!!!🙏
Post a Comment