Thursday, January 12, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஆறாவது ஸர்கம்.

 

      ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                                  ஆறாவது ஸர்கம்.




                                       இராவணனின் மாளிகையில் நுழைதல்.

     தன் விருப்பத்திற்கேற்ப வடிவெடுக்கும் வல்லமை பெற்ற ஸ்ரீஅனுமன், அங்கிருந்த மாளிகைகளிலெல்லாம், சீதையைக் காணாமல், தவிக்கும் நெஞ்சத்துடன், மீண்டும் வேகத்துடனும், லாகவத்துடனும் தன் தேடலைத் தொடர்ந்தார்.

     அப்பொழுது திருவருள் மிகப்பெற்ற ஸ்ரீஅனுமன், சூரியனின் கிரணங்கள் போல தகதகக்கும் மதிற்சுவர்களால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனான இராவணனின் மாளிகையை நெருங்கினார்.

     சிங்கக்கூட்டங்களினால் பெரும்வனம் காவல் காக்கப்படுவதைப் போல, கொடும் அரக்கர்களால் அந்த மாளிகை பாதுகாக்கப்பட்டிருப்பதை ஸ்ரீஅனுமன் உற்றுக்கவனித்தார்.

     தங்கத்தால் செய்யப்பட்டு, வெள்ளியிலான சித்திரங்கள் பொறிக்கப்பட்ட விதவிதமான தோரண வாயில்களையும், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நிலைகளைக் கொண்டிருந்த வாயிற்படிகளையும் அந்த மாளிகை கொண்டிருந்தது.

     வல்லமைமிக்க யானைப்பாகர்களை மேலே அமர்த்திக்கொண்டிருக்கும் யானைகளும், சோர்வென்பதை அறியாத, தடுக்கவியலாத வேகத்தில் செல்லக்கூடிய குதிரைகளால் பூட்டப்பட்டிருந்த தேர்களும் அங்கு நெருக்கமாக விளங்குவதைக் கண்டார்.

     தங்கம். வெள்ளி, தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டு, சிங்கம், புலி ஆகியவற்றின் மேல்தோல்களைக் கவசங்களாக மேலே அணிவிக்கப்பட்டிருந்த வியத்தகு தேர்கள், வியக்கும் வண்ணம் பலவித ஓசைகளை எழுப்பியபடி, இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தன.

     விலையுயர்ந்த இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களும் அங்கு நிறைய இருந்தன. பெரிய பெரிய தேர்கள் வந்து போவதற்கான பெரிய வீதிகளும், மகாரதர்கள்(ஒருவரே ஆயிரம் வில்லாளிகளோடு போர்புரியும் ஆயுதக் கலை அறிந்த விற்பன்னர்) தங்குவதற்கான மிகவும் விசாலமான இடங்களும் இருந்தன.

     பார்ப்பதற்கே வியப்பையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தர வல்ல ஆயிரக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் அந்த மாளிகையில் இருந்தன.

     நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ராக்ஷஸர்கள் வாயிற்காப்பாளர்களாக இருந்த அந்த மாளிகையில், மிகவும் மதிப்புவாய்ந்த பெருங்குலப் பெண்கள் சுற்றிலும் நிரம்பியிருந்ததையும் அவர் கண்டார்.

     அரக்கர்களின் வேந்தனின் இருப்பிடமான அந்த மாளிகையில், மிகுந்த களிப்புடன் விளங்கிய பெண்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் ஓசையானது, கடலிலிருந்து இடைவிடாது கேட்கும் ஓசையை ஒத்திருந்தது.

     ஒரு அரசனின் மாளிகைக்கான இலக்கணமாக, எல்லாவிதமான உயர்              நலன் களும் கொண்டிருந்த அந்த மாளிகையில், மிகவும் சிறந்த நறுமணப்பொருட்களான, அகில், சந்தனம் போன்றவை எங்கும் கமழ்ந்து கொண்டிருந்தன.  அடர்ந்த காட்டில் சுற்றித் திரியும் சிங்கங்கள் போல, அங்கே பேரரக்கர் கூட்டம் இருந்தது.

     பேரிகை, மிருதங்கம் போன்ற வாத்தியக் கருவிகள் முழங்கியவண்ணம் இருந்தன. சங்குகளின் ஓசை கேட்டவண்ணம் இருந்தது. பர்வ காலங்களில் (அமாவாசை மற்றும் பெளர்ணமி மற்றும் க்ரஹண நேரங்கள்) செய்யப்பட்டிருந்த யாகங்களையும், நாள்தோறும் செய்யப்படும் பூஜைகளையும் அவர் கண்டார். அந்த இடம் எப்பொழுதும் வணக்கத்திற்குரிய இடமாக இருந்ததையும் அவர் கண்டார்.

     பேரரசனின் அந்த மாளிகையானது, பரந்துவிரிந்த பெருங்கடல் போல விளங்கி, அந்தக் கடலிலிருந்து வரும் ஓசையை ஒத்த உற்சாகவோசை நிரம்பிவழிந்தும், வைர, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட தளங்களால் அலங்கரிக்கப்பட்டும் விளங்கியது.

     இயல்பாகவே ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த மாளிகை, யானைகள், குதிரைகள், தேர்கள் இவைகளால் மேலும் ஒளிமிகுந்து, இலங்கை நகருக்கே ஒரு ஆபரணம் போலத் துலங்கியதை சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன் கண்டார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே அவர், இராவணனது அந்த மாளிகையின் அருகிலேயே உலவத்தொடங்கினார்.

     வானரரான ஸ்ரீஅனுமன் வீடுவீடாக அரக்கர்களின் இல்லங்களைப் பார்த்து வருகையில், பூந்தோட்டங்களிலும், மேல்மாடிகளிலும், அச்சம் சிறிதுமின்றி உலவினார்.

     பேராற்றலும் பெரும்வேகமும் கொண்ட அவர், பிரஹஸ்தனுடைய வீட்டில் குதித்தார். அங்கிருந்து மீண்டும் மஹாபார்ஷ்வனுடைய வீட்டின் மீது தாவினார்.

     அங்கிருந்து, மேகத்தைப்போலிருந்த கும்பகர்ணன் வீட்டின் மீதும், பிறகு விபீஷணனின் வீட்டின் மீதும் தாவிச்சென்றார்.

     மேலும் அவர் அவ்வாறு தேடிக்கொண்டே, மகோதரன், வித்யுஜிஹ்வன், விருபாக்ஷன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் வீடுகளின் மீதும் தாவி ஏறினார்.

     அங்கிருந்து அவர், வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகர் மற்றும் அறிவாளியான சாரணன் ஆகியோரின் வீடுகளையும் தாவிச்சென்று பார்த்தார். அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன், மேலும் இந்திரஜித்தின் வீட்டிற்கும், ஜம்புமாலி மற்றும் சுமாலி ஆகியோரின் வீடுகளுக்கும் சென்றார்.

     மேலும் அவர், ரஷ்மிகேது, சூர்யஷத்ரு, மற்றும் வஜ்ரகாயன் ஆகியோரது வீடுகளைப் பார்வையிட்டார்.

     பிறகு ஸ்ரீஅனுமன், முறையே, தூம்ராக்ஷன், சம்பாதி, வித்யுத்ரூபன், பீமன், கனன், விகனன், ஷுகநாபன், சக்ரன், ஷடன், கபடன், ஹ்ருஷ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், லோமஷன்,யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், வித்யுஜிஹ்வன், த்விஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராலன், பிஷாசன் மற்றும் ஷோனிதாக்ஷன் ஆகியோரது இல்லங்களுக்கும் தாவிச்சென்று தேடினார். இவ்விதம் பார்த்த அரக்கர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் இருந்த செல்வச்செழிப்பை அவர் பார்த்தார்.

     இவ்வாறாக சுற்றிலும் இருந்த வீடுகளில் தாவிச்சென்று தேடிய  திருவருள் மிக்க ஸ்ரீஅனுமன், அரக்கர்களின் அரசனான இராவணனின் மாளிகையை மீண்டும் நெருங்கினார்.

     வானர வீரர்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தவரும், பேராற்றல் கொண்ட வானரருமான ஸ்ரீஅனுமன், மாளிகையின் உள்நுழைந்து உலவிய போது, இராவணனின் படுக்கையைச் சுற்றியும், சிலர் உறங்கியும், சிலர் விழித்துமிருந்து, சுழற்சிமுறையில் காவல் இருந்துகொண்டிருந்த, விகாரமான கண்களையுடைய அரக்கியரைக் கண்டார். அந்த அரக்கியரின் கைகளில் சூலம், சம்மட்டி(சுத்தியல் போன்ற), சக்திதோமரம் (உலக்கை மற்றும் கோடரி போன்ற) ஆயுதங்கள் இருந்ததையும் கண்டார்.

     இராவணனின் இருப்பிடத்தில் பெரும் படைகளையும் விதவிதமான ஆயுதங்களைத் தரித்த, பெரிய உடல்களைக்கொண்டிருந்த அரக்கர்களையும் அவர் பார்த்தார்.

     நற்குலத்தில் பிறந்து, நல்ல உடலமைப்பும், பெரும் வேகமும் கொண்ட, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், போருக்குத் தயாரான நிலையில் நின்றிருந்த குதிரைகளை அங்கு கண்டார்.

     மாவுத்தன் சொற்படி கேட்கும் பயிற்சிபெற்று, பகைவரின் யானைகளை வெல்லும் திறமையும் தேர்ச்சியும் பெற்று, எதிரிகளின் படைகளுக்கு காலனைப்போலத் திகழும், ஐராவதத்திற்குச் சமமான யானைகள் அங்கே இருக்கக்கண்டார். பொழிந்துகொண்டிருக்கும் மேகங்களால், மலைகளிலிருந்து அருவிகளாய் நீர் வடிந்துகொண்டிருப்பதைப்போல, கண்களில் மதநீர் வடிந்துகொண்டிருந்த, போரில் பிறரால் வெற்றிகொள்ள முடியாத அந்த யானைகள், இடிமுழக்கம்போல கர்ஜனை (மிகவும் ஓசையுடன் பிளிறுதல்) செய்துகொண்டிருந்ததையும் அவர் கண்டார்.

     அங்கே தங்கத்தாலான கவசங்களை அணிந்திருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்கள். காலைநேரக் கதிரவன் போல ஒளிவீசிக்கொண்டிருந்தார்கள்.  விதவிதமான பல்லக்குகளையும் அவர் கண்டார். மேலும், கொடிகளாலான மண்டபங்களையும், சித்திரங்கள் அலங்கரித்த சித்திர மண்டபங்களையும், விளையாடுவதற்கான அரங்கங்களையும், மரத்தால் செய்யப்பட்ட மலைகளையும் அங்கிருக்கக் கண்டார்.  பெண்களுடன் இருப்பதற்கான தனியிடங்களும், பகற்பொழுதில் காலத்தைக் கழிப்பதற்கான கேளிக்கை விடுதிகளும் , இராவணனின் மாளிகையில் இருந்ததைக் கண்டார்.

     இராவணனின் அந்த மாளிகை, மந்தர மலையைப் போல உயர்ந்திருந்தது. அங்கே மயில்கள் விளையாடுமிடங்களும், கொடிகள் பறக்கும் கொடிக்கம்பங்களும் நிறைந்திருந்தன. பலவிதமான விலையுயர்ந்த நவரத்னங்கள் நிறைந்த பொற்குவியல், தீரமிக்க பாதுகாவலர்களால் முறைப்படி காவல் காக்கப்பட்டு, அந்த இடமே, சிவபெருமான் வசிக்கும் கைலாய மலையோ என்று எண்ணும் வண்ணம் சிறந்து விளங்கியது.

     இராவணனின் மிகச்சிறப்பான தோற்றத்தாலும், பல்வேறு இரத்தினங்களின் ஒளிச்சிதறல்களாலும், அந்த மாளிகையானது, பல்வேறு நிறங்களில் ஒளிக்கற்றைகளை வீசும் சூரியனைப் போல ஒளிர்ந்தது.

     அந்த வானரவீரர், அங்கிருந்த பொன்மயமான கட்டில்களையும், சிம்மாசனங்களையும் இதர பாத்திரங்களையும் ஒளிர்ந்திருக்கக் கண்டார்.

     திராட்சை மதுரசமும், தேனும் கலந்து நனைத்திருந்த தரைகளும், இரத்தின மணிகள் பதிக்கப்பட்ட பாத்திரங்களும், குபேரனின் மாளிகையைப் போன்று விசாலமான மண்டபங்களும் அந்த மாளிகையினுள் இருந்தன.  கால்களில் அணியும் சலங்கைகளின் ஓசைகளும், இடையில் அணியும் மேகலைகளின் ஓசைகளும், மிருதங்கம் முதலான தாளமிசைக்கும் கருவிகளின் கம்பீரமான ஓசைகளும் அந்த மாளிகையில் கேட்டவண்ணம் இருந்தன.  அந்த மாளிகை பல மாடங்களை வரிசையாகக் கொண்டிருந்தது. அவற்றில் நூற்றுக்கணக்கான அழகிய பெண்கள் நிறைந்திருந்தனர். மேலும் அந்த மாளிகை பல அழகிய மண்டபங்களைக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட அந்த மாளிகையில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

               

                                                  ஆறாவது ஸர்கம் நிறைவு

1 comment:

K Aravindhankrishna said...

ஜெய் ஸ்ரீராம்..!!!🙏

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...