Saturday, February 4, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் எட்டாவது ஸர்கம்

           ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

                                  

                                                   எட்டாவது ஸர்கம்


 

     பெரும் வீரரும் வாயுவின் மைந்தனுமான அவ்வானரர், அந்த மாளிகையின் நடுவில், உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்டு, மணிகளும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டிருந்த அந்த விமானத்தைப் பார்த்தார்.

     அளவிடமுடியாததும், இன்னதென்று அறுதியிட்டு விவரிக்க முடியாத வியப்புக்களைக் கொண்டதும், விஷ்வகர்மாவினாலேயே செய்யப்பட்டு, அவராலேயே இது மிகவும் சிறந்தது என மகிழப்பட்டதும், வான்வழியே செல்லவல்லதுமான அந்த விமானம், சூரியன் செல்லும் பாதையில் ஒரு விளக்கம் போல் விளங்கியது.

     அந்த விமானத்தில் இருந்த ஒவ்வொரு பொருளும் மிகவும் கவனத்துடனும் பெரும் முயற்சியுடனும் செய்யப்பட்டிருந்தது. உயர்ரக இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்படாத பகுதிகளே அதில் இல்லை. தேவர்களுக்கூட வாய்த்திருக்காத அந்த விமானத்தில், அரிதற்ற பொருளென்று ஏதுமில்லை.

     ஒருமித்த மனதுடன் செய்யப்பட்ட கடுமையான தவத்தின் பயனாகப் பெறப்பட்ட அந்த விமானம், மனம் நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தது.  பலவிதமான தங்குமிடங்களைக் கொண்டிருந்த அந்த விமானம், மிகவும் கவனத்தைக் கவரும் நேர்த்தியான வேலைப்பாடுகளை ஆங்காங்கே கொண்டிருந்தது.

     செலுத்துபவரின் மனமறிந்து தன் வேகத்தை அமைத்துக்கொள்ளும் திறன் கொண்ட அது, எவராலும் வெல்ல முடியாததாக இருந்தது. காற்றின் வேகத்தில் கடுகிச்செல்லும் அந்த விமானம், ஆன்றோர்களும், நல்வினையாற்றியவர்களும், அனைத்துப் பேறுகளையும் பெற்றவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும், தேவர்களும் உறையும் இடம் போலத்துலங்கியது.

     வியத்தகு பொருட்களால் வியக்கும்வண்ணம் செய்யப்பட்டிருந்த அந்த விமானம், மனதிற்குகந்ததாயும், களங்கமற்ற இலையுதிர்காலத்து முழுநிலவினைப் போலவும் விளங்கியது, அற்புதமான பல அழகிய உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிருந்த அது, பல சிகரங்கள் சூழ நிற்கும் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கும் மலையைப் போலவும் விளங்கியது.

     காதுகளை அலங்கரிக்கும் குண்டலங்களினால் பொலிவுற்ற முகங்களையும், அகன்ற சுழலும் கண்களையும் கொண்டு, வேகமாகச்செல்லும், பெருந்தீனியுண்ணும், வானத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான பூதகணங்களால் தாங்கப்படுவதுமாக அந்த விமானம் இருந்தது.

     இவ்விதமாக மிகச்சிறப்புக்களுடன் இருந்த அந்த விமானம், பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்து மலர்க்கொத்துக்களைப் போல அழகுற விளங்கி , வசந்தகாலத்தையே விஞ்சும் வண்ணம் பொலிவுடன் விளங்கியதை, வானரர்களுள் மிகச்சிறந்தவரான ஸ்ரீஅனுமன் கண்ணுற்றார்.

    

                                            எட்டாவது ஸர்கம் நிறைவு

1 comment:

K Aravindhankrishna said...

விமான வர்ணனை அழகு...

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...