ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பதின்மூன்றாவது ஸர்கம்.
விமானத்திலிருந்து இறங்கி வந்த ஸ்ரீஅனுமன், மாளிகையின்
மதிலில் தாவி ஏறினார். மேகங்களிடையே தோன்றும்
மின்னலின் வேகத்தில் இங்கும் அங்கும் தேடத் தொடங்கினார்.
இராவணனது எல்லா வீடுகளிலும் மீண்டும் வேகமாகத்
தேடியும் சீதையைக் காண முடியாத ஸ்ரீஅனுமன், தனக்குள்ளே இவ்விதம் பேசத் தொடங்கினார்.
“ஸ்ரீராமனை மகிழ்விக்க வேண்டி, நான் இந்த இலங்கையைப்
பலமுறை சோதித்துத் தேடியும் மிகவும் அழகிய உடலமைப்புக் கொண்ட, வைதேஹியான சீதையை நான் பார்க்க இயலவில்லை.”
“நான் இங்கிருக்கும் குளம், குட்டை, ஏரிகள்,
நதிகள், காடுகள், ஏறமுடியாத மலைச்சிகரங்கள் அனைத்திலும் தேடிவிட்டேன். இந்த இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் தேடியும்,
சீதையைக் காண இயலவில்லை.”
“பறவைகளின் அரசனான சம்பாதியும், சீதை இராவணனது
மாளிகையில் இருப்பதாகத் தானே சொன்னார்? ஆனாலும் என்னால் ஏன் பார்க்க இயலவில்லை?”
“விதேஹ
குலத்தின் குலவிளக்காக மிதிலையில் பிறந்த ஜனகனின் மகளான சீதை, இராவணனால் பலாத்காரமாக
அபகரிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் சோர்வடைந்து, இராவணனுக்கு பணிவிடை செய்ய நேரிட்டிருக்குமோ? அதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை”.
“ஸ்ரீராமனின் அம்புகளுக்குப் பயந்து, சீதையைத்
தூக்கிக்கொண்டு, அதிவிரைவாக இராவணன் பறக்கும்போது, ஒருவேளை சீதை நழுவி, கீழே விழுந்திருக்கக்
கூடுமோ?”
“இல்லையெனில், சித்தர்கள் பயணிக்கும் பாதையான
ஆகாயத்தின் வழியே பறக்கும்போது, கீழே கடலைப்பார்த்து, மயக்கமுற்று, கீழே விழுந்திருப்பாளோ?”
“இராவணன் அவளைத் தன்னுடைய வலிமையான கரங்களால்
கட்டியபடி, பெரும் வேகத்தில் சென்றதால், அழகிய நீண்ட விழிகளைக் கொண்ட சீதை, தன் உயிரை
விட்டிருப்பாளோ?”
“கடலின்
மீது இராவணன், சீதையுடன் பறக்கும்போது, இராவணனின் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியில்
சுழன்றதால், கீழே விழுந்திருக்கக்கூடுமோ?”
“இல்லையென்றால், தன்னுடைய மானத்தைக் காத்துக்கொள்ள,
உறவினர் யாருடைய உதவியும் இல்லாமல் போராடிய சீதையை, கொடிய இராவணன் கொன்று தின்றிருப்பானோ?”
“அவ்வாறில்லையெனில், தீய எண்ணங்கள் கொண்ட இராவணனின்
மனைவியர், நிர்மலமான கரிய விழிகளைக் கொண்ட சீதையைத் தின்றிருப்பார்களோ?”
“முழுநிலவின் ஒளியையும், தாமரையின் இதழ்களையொத்த
கண்களையும் கொண்ட ஸ்ரீராமனை மனத்தில் இருத்தி, தியானம் செய்துகொண்டே, வருத்தம் மிகுந்த
சீதை உயிரை விட்டிருப்பாளோ?”
“’ஹே ராமா! ஹே லக்ஷ்மணா! ஹே அயோத்யா!’ என்று
சோகத்துடன் அழைத்தபடியே, விதேஹ குமாரி சீதை, தன் உயிரை விட்டிருக்கவேண்டும்!’
“இவ்வாறெல்லாம் இல்லையென்றால், இராவணனால் ஏதும்
இரகசிய அறையில் சீதை அடைக்கப்பட்டிருந்து, கூண்டிலடைபட்ட மைனாவைப் போல மீண்டும் மீண்டும்
குரலெடுத்து அழுது கொண்டிருப்பாளோ? என்று எனக்குத் தோன்றுகிறது.”
“ஜனக வம்சத்தில் பிறந்தவளும், ஸ்ரீராமனின் மனைவியும்,
நீலத்தாமரையினையொத்த கண்களையும், மெல்லிய இடையையும் உடையவளான சீதை, எவ்விதம் இராவணனிடம்
அடைபட்டிருக்க முடியும்?”
“ஜனகனின் மகளாகிய சீதை, பாதாள அறையில் இரகசியமாக
அடைக்கப்பட்டிருந்தாலும், அல்லது கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டிருந்தாலும்,
அல்லது, ஸ்ரீராமனைப் பிரிந்த துயரத்தால் உயிரை விட்டிருந்தாலும், இந்தச் செய்தியை,
தனது மனைவியை மிகவும் நேசிக்கும் ஸ்ரீராமனிடம் சொல்வது ஏற்புடையதாக இராது.”
“இந்தச் செய்தியைச் சொல்வதும் குற்றமாகும், சொல்லாமல்
மறைப்பதும் குற்றமாகும்! ஆகவே நான் என்ன செய்வது?”
“எந்தச் செயல் செய்வதாக இருந்தாலும் அது இன்னல்
மிகுந்ததாக உள்ளது. எனவே, இந்த இக்கட்டான நேரத்தில், எந்தச் செயலைச் செய்வது சரியானதாக
இருக்கும்?” என்று ஸ்ரீஅனுமன் யோசிக்கலானார்.
“சீதையைக் காணாமல், நான் வானர ராஜ்யமான கிஷ்கிந்தைக்குத்
திரும்பிச் சென்றால் எனது வீரம் என்னாவது?”
“அவ்வாறு நிகழ்ந்தால், இந்தக் கடலைத் தாண்டி
இலங்கையில் நுழைந்து, இந்த அரக்கர்களிடையே தேடிய என் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போகுமே?”
“இப்படியே நான் கிஷ்கிந்தைக்குச் சென்றால், அங்கே
சுக்ரீவன், மற்ற வானர வீரர்கள், ஸ்ரீராமன் மற்றும் இலக்குவன் ஆகியோர் என் செயலைப்பார்த்து
என்ன சொல்வார்கள்?”
“அங்கே போகும் நான், ஸ்ரீராமனிடம், ‘என்னால்
சீதை இருக்குமிடத்தை அறிய முடியவில்லை’ என்று சொல்லும் கொடிய வார்த்தைகளைக் கேட்டு
அவர் தன் உயிரை விட்டுவிடுவாரே?”
“சீதையைப் பற்றி நான் கூறும் இத்தகைய கடுமையான,
கொடூரமான, கருணையற்ற, புலன்களை வருந்தச்செய்யும் செய்தியைக் கேட்டால், ஸ்ரீராமன் சிறுபொழுதும்
உயிர் தரித்திருக்கமாட்டாரே?”
“ஸ்ரீராமனிடத்தில் அதிக அன்பு கொண்ட, புத்திசாலியான
இலக்குமணனும், துயரம் மிகுந்து வருந்தி அவர் உயிர் துறக்கும் நிலையைக் கண்ணுற்றால்,
தானும் உயிரை விட்டு விடுவாரே?”
“தன்னுடைய சகோதரர்களான ஸ்ரீராமன், மற்றும் இலக்குவன்
ஆகியோருக்கு நேர்ந்த முடிவைக் கேள்வியுறும் பரதனும் தன் இன்னுயிரை விட்டுவிடுவாரே?
அதைப் பார்க்கும் சத்ருக்னனும் உயிர் தரித்திருக்கமாட்டாரே?”
“தங்களுடைய குமாரர்களின் மரணச்செய்திகளைக் கேட்கும்
இவர்களின் அன்னையர்களான, கெளசல்யா, சுமித்திரை, மற்றும் கைகேயி ஆகியோரும் தங்கள் உயிரை
நிச்சயமாக விட்டுவிடுவார்கள் அல்லவா?”
“வானர அரசனான சுக்ரீவன், கருணைமிக்கவனும், வாக்குத்தவறாதவனும்
ஆவார். ஸ்ரீராமன் இவ்விதம் உயிர்விடுவதை அறிந்தால்,
அவரும் தன் உயிரை நீத்துவிடுவாரே?”
கணவனை இழந்து, உடைந்த இதயத்துடன், மகிழ்ச்சியற்று
துன்பத்தில் இருக்கும் தபஸ்வியான ரூமாவும் (சுக்ரீவனின் மனைவி) தன் உயிரை விட்டுவிடுவாரே?”
“வாலியைப் பிரிந்து சோகத்தில் இருக்கும் ராணி
தாராவும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து உயிருடன் இருக்க மாட்டாரே?”
“பெற்றோரையும் மற்றும் சுக்ரீவனையும் இழந்து
துயரம் கொள்ளும் இளவரசன் அங்கதனும் எவ்விதம் உயிர் வாழ முடியும்?”
“தங்கள் தலைவனை இழந்த வானரங்கள், அந்தத் துயரம்
தாளாமல், தங்கள் கைகளாலும், முட்டியாலும் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்வார்களே?”
“புகழ்மிக்க வானர அரசனான சுக்ரீவன், நல்வார்த்தைகளாலும்,
தாராளமான கொடைகளாலும் வானரர்களை அன்புடன் ஆண்டு வந்தான். அவன் உயிரிழந்தால், இந்த வானரர்களும்
தங்கள் உயிரை விட்டுவிடுவார்களே?”
“மீதமுள்ள வானரர்களும் காடுகளிலும் மலைகளிலும்,
குகைகளிலும் சேர்ந்து விளையாடி மகிழ்வதை விட்டு விடுவார்களே?”
“தங்கள் அரசனுக்கு நேர்ந்த துயரத்தைக் காண இயலாமல்,
இந்த வானரர்கள், தங்கள் மனைவியர், குழந்தைகள், மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் மலைகளின்
உச்சியிலிருந்து சமதரையிலும் பாறைகள் மீதும் விழுந்து தங்கள் உயிரைப்போக்கிக் கொள்வார்களே?”
“இல்லையென்றால், எல்லா வானரர்களும் விஷம் அருந்தியோ,
தூக்கிட்டுக்கொண்டோ, எரியும் தீயில் நுழைந்தோ, உண்ணாநோன்பிருந்தோ அல்லது ஆயுதங்களைப்
பயன்படுத்தியோ தங்கள் உயிரை விட்டுவிடுவார்களே?”
“நான் அங்கு செல்ல நேர்கையில், இவ்வாறு, இஷ்வாகு
வம்ச அழிவினாலும், வானர குல அழிவினாலும் மிகவும் அச்சம்கொள்ளத்தக்க ஓலம் கேட்கும் என்று
நினைக்கிறேன்”.
“ஆகையினால் நான் இங்கிருந்து கிஷ்கிந்தைக்குச்
செல்ல மாட்டேன். மிதிலையின் குமாரியான சீதையைக்
கண்டுபிடிக்காமல், என்னால் சுக்ரீவனைச் சந்திக்க முடியாது.”
“எனவே, நான் இங்கேயே தங்கி, கிஷ்கிந்தைக்குக்
செல்லாமல் இருந்தால், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன், தர்மத்திலும் வீரத்திலும்
நிகரற்ற ஸ்ரீராமனும், இலக்குவணனும், உயிருடன் இருப்பார்கள். வேகத்தில் சிறந்த வானரர்களும் உயிருடன் இருப்பார்கள்.”
“ஜனகனின் மகளாகிய சீதையை நான் இங்கே காணமுடியாவிட்டால்,
வானப்பிரஸ்தம் மேற்கொண்டு, இங்கேயே இருந்துவிடுவேன். கைக்குக் கிடைப்பதையும், வாய்க்கு அதுவாகக் கிடைப்பதையும்
உண்டு, நியமத்துடன் மரங்களில் வசித்து வருவேன்”.
“கடலுக்கு அருகில், நீர்வளமும் காய் கனிகளும்
நிறைந்த பகுதியில். தீ மூட்டி, கொழுந்துவிட்டு எரியும் அந்த நெருப்பில் நுழைந்து உயிர்
துறப்பேன்”.
“உடலினுள் இருக்கும் ஆன்மாவை விட்டுவிடுவதற்காக,
கடும் உபவாசம் மேற்கொண்டிருக்கையில், காகங்களும், மாமிசம் உண்ணும் மிருகங்களும் என்
உடலை உணவாக்கிக்கொள்ளட்டும்.”
“சீதையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நீரினுள்
நுழைந்து என் உயிரைப் போக்கிக்கொள்வேன். ஏனென்றால்,
மாமுனிவர்களும் இந்த வழியில் தான் தங்கள் உடலைத் தியாகம் செய்து மேலுலகம் சென்றுள்ளார்கள்
என்பதை நான் அறிந்துள்ளேன்.”
“நல்ல முறையில் வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்டும்,
சீதையைக் காண இயலாததால், நிலவொளியுடன் கூடிய இந்த நெடிய இரவு வீணாகக் கழிந்தது.”
“மிகுந்த நெறிமுறையுடன் மரத்தின் கீழே வசித்துத்
தவம் செய்யும் முனிவனாக ஆவேனே தவிர, கரியவிழிகளைக் கொண்ட சீதையைக் காணாமல் ஒருபொழுதும்
திரும்பிச்செல்ல மாட்டேன்.”
“சீதையைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளாமல்
நான் திரும்பிச்சென்றால், அங்கதன் முதலான வானர வீரர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்!”.
“உயிரை மாய்த்துக்கொள்வதால் துன்பங்கள்தான் ஏற்படும். ஆனால் உயிருடன் இருந்தால் மட்டுமே நல்ல விஷயங்கள்
உறுதியாக ஏற்படும். ஆகவே, நான் உயிரை விட மாட்டேன். உயிருடன் இருந்தால் மட்டுமே, நினைத்த காரியம் கைகூடவும்
, மகிழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புக் கிடைக்கும்.”
இவ்விதாமாக பலவித சிந்தனைகளால் உண்டான வருத்தங்களை மனதினுள் சுமந்துகொண்டிருந்த வானரவீரனான ஸ்ரீஅனுமன் மிகுந்த துயரத்தில் இருந்தார்.
திடீரென்று மிகவும் தைரியம் வரப்பெற்ற ஸ்ரீஅனுமன்,
“பத்துத் தலைகள் கொண்ட பலம்வாய்ந்த இராவணனை நான் கொன்று விடுகிறேன். அவனால் கவர்ந்துவரப்பட்ட சீதைக்கு என்ன நேர்ந்திருந்தாலும்,
அதுவே அவனது செயலுக்குத் தரும் சரியான பதிலடியாக இருக்கும்” என்று எண்ணினார்.
“இல்லையெனில், வேள்வியில், தேவதைகளுக்கு மிருகங்களை
உணவாகப் படைப்பது போல், இராவணனைப் பிடித்து இழுத்துக்கொண்டு, கடலின் மீது பறந்து சென்று,
ஸ்ரீராமனிடம் ஒப்படைத்து விடுகிறேன்.”
சீதையைக் கண்டுபிடிக்க முடியாத துயரத்தில் இருந்த
ஸ்ரீஅனுமனின் மனம் முழுவதும் கவலையாலும் பலவித எண்ணங்களாலும் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அவர் மீண்டும் இவ்வாறு எண்ணத்தொடங்கினார்.
“சீதையைப் பார்க்க எவ்வளவு நாட்களானாலும், அதுவரை,
இந்த இலங்கையில் நான் மீண்டும் மீண்டும் தேடிகொண்டே இருப்பேன்.”
“நான் சம்பாதி பறவையின் பேச்சை நம்பி, ஸ்ரீராமனை
இங்கு அழைத்து வந்திருந்தால், சீதையை இங்கு காணாத அவர், எல்லா வானரர்களையும் எரித்துச்
சாம்பலாக்கியிருப்பாரே!”
“ஆகவே, உணவையும் புலன்களையும் சுருக்கிக்கொண்டு,
இங்கேயே வாழ்ந்துவிடுகிறேன். இதனால், மனிதர்களும்,
வானரர்களும் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள்!”
“இதோ! இங்கே மிகப்பெரிய அசோக வனம் இருக்கிறது. இதனுள் மிகப்பெரிய மரங்கள் உள்ளன. நான் இதனுள் இதுவரை நுழைந்து பார்க்கவில்லை. ஆகவே இதனுள் சென்று தேடுவேன்!”
“அரக்கர்களுக்கு பெருந்துன்பம் அளிக்க வல்ல நான்,
வசுக்கள்,ருத்ரர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகுமாரர்கள் மற்றும் மாருதர்களையும் வணங்கிவிட்டு
இந்த அசோக வனத்திற்குள் நுழைகிறேன்!”
“நான் இங்கு எல்லா அரக்கர்களையும் வென்றுவிட்டு,
இஷ்வாகு குலத்திற்கு மகிழ்ச்சியைத் தரவல்ல சீதையை மீட்டு, தவம் செய்பவர்கள் பெறும்
தவப்பயன் போல, ஸ்ரீராமனுக்குப் பரிசாகக் கொண்டு சேர்ப்பேன்.!”
இவ்விதமாக, ஒரு முகூர்த்த நேரம் பலவிதமான எண்ணங்களினால்
மனக்கலக்கம் கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், தனது புலன்களையெல்லாம் தன்வசம் மீட்டுக்கொண்டு,
எழுந்து நின்றார்.
“இராம இலக்குவணருக்கு என் வணக்கங்கள். ஜனக குமாரி சீதாதேவிக்கு என் வணக்கங்கள். ருத்ரன், இந்திரன், எமன் மற்றும் வாயு முதலான தேவர்களுக்கும்
எனது வணக்கங்கள். சந்திரன், அக்னி, மற்றும்
மருத கணங்களுக்கு என் வணக்கங்கள்.”
இவ்விதமாக அனைவரையும் பணிந்து வணங்கிய ஸ்ரீஅனுமன்,
தன் அரசனான சுக்ரீவனையும் வணங்கி, எல்லாத் திசைகளிலும் கவனமாகப் பார்த்துக்கொண்டு,
அசோகவனம் இருக்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
அந்த அசோக வனத்தினுள் முதலில் மானசீகமாக நுழைந்த
வாயுகுமாரரான ஸ்ரீஅனுமன், தான் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி நினைக்கலானார்.
“பல காடுகளால் சுற்றிலும் சூழப்பட்டுள்ள இந்த
அசோக வனம் எல்லா விதமான சிறப்புக்களையும் கொண்டதாய் உள்ளது. ஆகவே, பல அரக்கர்கள் சுற்றி நின்று இதைக் காவல்
காத்திருப்பார்கள்!”
“இராவணனால் நியமிக்கப்பட்ட அரக்கர்கள் நிச்சயம்
இந்த வனத்தின் மரங்களைத் தீவிரமாகப் பாதுகாப்பார்கள். அதனால்தான், உயிர்காக்கும் தேவனான
வாயுதேவனும் இங்கு தன் வேகத்தைக் காட்டவில்லை.”
“ஸ்ரீராமனின்
காரியம் வெற்றியடையவும், இராவணனின் பார்வையிலிருந்து தப்பவும், நான் என் உருவத்தைச்
சிறிதாக்கிக்கொண்டுள்ளேன். அனைத்து முனிவர்களும்
தேவர்களும் எனக்கு வெற்றியை அளிக்க வேண்டும்.”
“தானே உருவானவரான பிரம்ம தேவரும், மற்றனைத்து
தேவ கணங்களும், தவவலிமை மிக்க முனிவர்களும், அக்னி,வாயு முதலான தேவர்களும், வஜ்ராயுதத்தைத் தரித்தவனான இந்திரனும் எனது வெற்றிக்கு
உதவி செய்யட்டும்!”
“கையில் பாசாயுதம் தரித்த வருணனும், சந்திர,
சூரியர்களும், மஹா அஸ்வினிகுமாரர்களும், எல்லா மருத கணங்களும், எல்லா பூத கணங்களும்,
அவற்றின் அதிபதிகளும், வழியில் கண்ணில் தெரியும் தேவதைகளும், மறைந்திருக்கும் தேவதைகளும்
எனக்கு வெற்றியை அருளட்டும்.!”
“எடுப்பான நாசியும், முத்துக்கள் போன்ற வெண்ணிறப்
பற்களும், மாசு மருவற்ற புன்னகையுடன் கூடிய முகமும், மலர்ந்த தாமரை போன்ற கண்களும்,
களங்கமில்லாத முழுநிலவினைப் போன்ற ஒளியும் கொண்ட அந்த சீதாதேவியை நான் எப்பொழுது பார்ப்பேன்?”
“கொடியவனும், தீச்செயல் புரிபவனும், கருணையற்றவனும்,
கொடூரமான உருவத்தையுமுடைய இராவணன், மாய வேடம் பூண்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு, உதவியற்ற
அபலையான சீதையை அபகரித்து வந்து, மறைத்து வைத்துள்ளான். அந்த சீதையை நான் எவ்விதம் என் கண்களால் காண்பேன்?”



1 comment:
வாயுபுத்திரனின் நிலை கண்டு மனம் பதறுகிண்றது....
Post a Comment